தொடரும் கனமழை.. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
சென்னை: கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் வழக்கம்போல் பள்ளிகள், கல்லூரிகள் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தொடர்ந்து 3 நாட்களாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் சென்னைக்கு அருகில் கடலில் நிலை கொண்டிருந்த போது, கொஞ்சம் கொஞ்சமாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. அதன்பின் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து, சென்னைக்கு அருகில் நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்றிரவிலும் கூட சென்னையின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. அதேபோல் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக இன்றும் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி இரு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து 3வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது. மழை படிப்படியாக குறைந்து வரும் பட்சத்தில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை இன்னும் சீராகவில்லை.
அதேபோல் இன்று காலை முதலே வானம் வெறிச்சோடி காணப்படுவதால், நாளை முதல் பள்ளிகள் இயங்கலாம் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சூழல் மாறி வருவதால், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications