அடுத்த 3 மணி நேரத்துக்கு விடாது போல.. 17 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. வானிலை மையம் அப்டேட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழை (Heavy Rain Alert) பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மதுரை, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், விருதுநகர், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. சில மாவட்டங்களில் மதியம் வரை வெயில் கொளுத்தியது. அதன்பிறகு சில இடங்களில் மழை பெய்யத் தொடங்கியது.

அடுத்த 3 மணி நேர அப்டேட்
மழையின் காரணமாக நீர்நிலைகளில் தண்ணீர் மட்டம் கடகடவென உயர்ந்து வருகிறது. மதுரையில் நேற்று பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் மக்கள் அவதியடைந்தனர். இந்த நிலையில் இன்றும் இரவு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது. வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
"தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை நீலகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 17 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது."
இன்றும் நாளையும் கனமழை வெளுக்கும்
முன்னதாக மதியம் வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- இன்று வியாழக்கிழமை வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
குறிப்பாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (12 ஆம் தேதி) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 13 முதல் 17 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று மழைக்கு சான்ஸ்
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34°C, குறைந்தபட்ச வெப்பநிலை 26°C இருக்கக்கூடும்.
சென்னையில் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34°C, குறைந்தபட்ச வெப்பநிலை 26°C இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications