சென்னை ஓவர் அடுத்து தென் தமிழ்நாடு! தொடரும் கனமழை, மேகவெடிப்பு, வெள்ளம்! என்ன நடக்குது தமிழ்நாட்டில்
சென்னை: சென்னையில் இப்போதுதான் பெரும் புயல் வெள்ளம் தாக்கிய நிலையில் தற்போது தென் தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது.
தென் மாவட்டங்களில் விடாமல் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் கடுமையான வெள்ளமும் ஏற்பட்டு உள்ளது. மேகவெடிப்பு என்று சொல்லும் அளவிற்கு குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இதுவரை மழை பதிவாகி உள்ளது.

நாளை காலை 300 மி.மீட்டர் மழை அளவை தொடும். செவ்வாய் கிழமைதான் இந்த மழை குறையும். இது ஆபத்தான மழை என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
விடாத மழை: நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் கொடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். அதேபோல் தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது.
அங்கே கடந்த 10 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை தொடர்பாக சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மையிலாடி - அஞ்சுகிராமம் சாலை, கோழிகோட்டு பொத்தை - தோவாளை சாலை, இறச்சகுளம் - திட்டுவிளை சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல் ஓடுகிறது. அந்த சாலைகளில் போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டு உள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் செல்கிறார்கள்
எச்சரிக்கை மேல் எச்சரிக்கை: தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓட வாய்ப்பு இருப்பதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கொட்டும் கனமழையால் நெல்லை மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 30,000 கன அடி வரை அதிகரிக்கப்பட உள்ளது.
மிக்ஜாம் புயல்: சென்னையில் இப்போதுதான் பெரும் புயல் வெள்ளம் தாக்கிய நிலையில் தற்போது தென் தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. மிக்ஜாம் புயல் இப்போதுதான் சேனையை புரட்டி எடுத்தது. இந்த நிலையில் தற்போது தென் மாவட்டங்களில் வெள்ளம் ஏற்படுகிறது.
இனி சாதாரண மழையே இல்லை என்று சொல்லும் அளவிற்கு மழை பெய்தாலே.. வெள்ளம், சூறாவளி, புயல், மேகவெடிப்பு என்று மோசமான நிகழ்வு மட்டுமே ஏற்படுகிறது. இந்த தொடர் நிகழ்வுகளுக்கு காலநிலை மாற்றமும் காரணமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
காலநிலை மாற்றம்: உலகம் முழுக்க ஒவ்வொரு பகுதியும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியின் வெப்பநிலையும் உயர்ந்து வருகிறது. மீண்டும் சரி செய்யவே முடியாத தவறுகளை நாம் செய்து வருகிறோம்.
இது மனித குலத்திற்கான "கோட் ரெட்" எச்சரிக்கை மணி. உலகின் வெப்பநிலை அடுத்த 20 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்ஸியஸ் உயர போகிறது.. இனி நாம் இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.... கடந்த சில நாட்களுக்கு முன் ஐநா அமைப்பு வெளியிடப்பட்ட Intergovernmental Panel on Climate Change எனப்படும் காலநிலை மாற்ற அறிக்கையில் இடம்பெற்ற வரிகள் இவை.
ஆம், காலநிலை மாற்றம் மிக மோசமான நிலையை அடைந்துவிட்டதாகவும், நாம் காலநிலை மாற்றத்தின் கோட் ரெட் காலத்தில் இருப்பதாகவும் இந்த ஆய்வு அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிலும் இந்த நூற்றாண்டு முழுக்க கடலோர பகுதிகளில் கடல் மட்டம் தொடர்ந்து உயரும். இதனால் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து வெள்ளங்கள், புயல்கள் ஏற்படலாம்.
கடலோரத்தை ஒட்டி இருக்கும் சிறு சிறு கிராமங்கள் மொத்தமாக அழிந்து போகவும் வாய்ப்புகள் உள்ளன. பல கடற்கரைகள் காணாமல் போகும். 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை முன்பு ஏற்பட்டு வந்த கடல் சார்ந்த வெள்ளம், கடல் சார்ந்த பேரிடர்கள் இனி எல்லா வருடமும் ஏற்படும் ஆபத்துகள் உள்ளன.
எதிர்காலம் ஆபத்து நிறைந்ததாக காணப்படுகிறது. வெப்பநிலை இனி வரும் நாட்களில் உயர உயர மேலும் மோசமான காலநிலை ஆபத்துகள், பேரிடர்கள் ஏற்படும், பனிப்பாறைகள் வேகமாக உருகும். நினைத்ததை விட காட்டுத் தீ வேகமாக பரவும். வெப்ப காற்று தாக்குதல்கள் இனி அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இது ஆர்க்டிக் கடலில் ஐஸ் உருகவும், அங்கு மின்னல் பாதிப்புகளை ஏற்படுத்தவும், பனி பாறைகள், படலங்கள் உருகவும் வழி வகுக்கும் என்று ஐநா அமைப்பு வெளியிடப்பட்ட Intergovernmental Panel on Climate Change எனப்படும் காலநிலை மாற்ற அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications