வெயிலுக்கு கெட்அவுட்..மழைக்கு கட்அவுட்! மக்களே ரொம்ப கவனம்.. ஊட்டியாய் மாறப் போகும் 23 மாவட்டங்கள்!
சென்னை: தமிழகத்தில் பிப்ரவரி மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்த நிலையில் மார்ச் மாத தொடக்கத்தில் வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் ஆறுதல் அளிக்கும் விதமாக 11ஆம் தேதி முதல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வடகிழக்கு பருவமழை நிறைவடைந்த நிலையில் தமிழகத்தில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் உறை பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. ஜனவரி முடிந்து பிப்ரவரி ஆரம்பித்து சில நாட்களிலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்தது.

அதே நேரத்தில் பிப்ரவரி முதல் வாரம் வரை பகலில் கடுமையான வெயிலும், இரவில் கடுமையான பனிப்பொழிவும் இருந்தது. குறிப்பாக பிப்ரவரி மாதத்தில் கடந்த காலங்களை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
குறிப்பாக ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் அதிகமாகவே இருந்தது. மேலும் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக தமிழகத்தில் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் 11ஆம் தேதி முதல் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்றும், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மார்ச் 13 முதல் மார்ச் 18 வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நாளை (மார்ச் 13) ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் கூறியுள்ள நிலையில், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, நாமக்கல், கரூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியிலும் ஓரிரு இடங்களில் லேசான இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications