அடுத்த 2 மணி நேரம்.. விட்டு விளாசப் போகுது மழை.. சென்னை உள்பட 14 மாவட்டங்களுக்கு அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நெல்லை, தென்காசி, குமரி என 14 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 30 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே வானிலை மையம் கூறியிருந்தது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி மற்றும் குமரி மாவட்டங்களில் மழை பெய்து இருந்தது. நேற்று முன் தினம் இரவு சென்னையில் கனமழை பெய்து இருந்தது.

அடுத்த 2 மணி நேரம்
இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், நெல்லை, தென்காசி என தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 7 மணி வரை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மற்றும் குமரி ஆகிய 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஈரோடு மற்றும் விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு
முன்னதாக இன்று மதியம் வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்றும் நாளையும், லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
வரும் 26 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
27, 28 ஆம் தேதி
27-06-2025 மற்றும் 28-06-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 29-06-2025 மற்றும் 30-06-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று (24-06-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37* செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 28 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை (25-06-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications