காலையிலேயே வெளுத்து வாங்க போகுது மழை.. 10 மணி வரை 9 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்
சென்னை: தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று பல்வேறு இடங்களில் பெய்த மழையினால் தமிழகம் குளிர்ந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலையிலேயே மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 10 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகம் முழுக்க நேற்று பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து எடுத்தது. இதனால் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. ஆறுகள், ஓடைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்த கடந்த 3 நாட்களாகவே மழை பெய்து வருவதால் தமிழகத்தில் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது.

9 மாவட்டங்களில் மழைக்கு சான்ஸ்
இந்த நிலையில் இன்று காலையிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் இன்று சென்னையில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தது. சென்னையில் இன்று திங்கட்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று கூறியிருந்தது.
இன்று மதியம் வரை மழை வெளுக்கும்
தொடர்ந்து வானிலை மையம் 10 மணிக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதியம் 1 மணி வரை தமிழகத்தில் மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இதேபோன்று இன்று மதியம் 1 மணி வரை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், விருதுநகர், சிவகங்கை, குமரி மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மழை அளவு
மழையை பொறுத்தவரை நேற்று கரூர் (கரூர்), லக்கூர் (கடலூர்), கீரனூர் (புதுக்கோட்டை), குப்பணம்பட்டி (மதுரை) தலா 5 செமீ மழை பெய்தது. மேலாலத்தூர் (வேலூர்), புதுச்சத்திரம் (நாமக்கல்), வாடிப்பட்டி (மதுரை), எழுமலை (மதுரை) கிருஷ்ணராயபுரம் (கரூர்), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி) ராசிபுரம் (நாமக்கல்) தலா 4 செமீ மழை பெய்தது.
ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்), மோகலூர் (நாமக்கல்), கோடிவேரி (ஈரோடு), பஞ்சப்பட்டி (கரூர்), உடையாளிபட்டி (புதுக்கோட்டை), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), பாலக்கோடு (தர்மபுரி), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), அரவக்குறிச்சி (கரூர்), ஆத்தூர் (சேலம்), விராலிமலை (புதுக்கோட்டை), செட்டிகுளம் (பெரம்பலூர்), ஒகேனக்கல் (தர்மபுரி), கிருஷ்ணபுரம் (பெரம்பலூர்), நடுவட்டம் (நீலகிரி), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) தலா 3 செமீ மழை பெய்தது.












Click it and Unblock the Notifications