தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை! நவம்பர் 12-ல் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் வரும் நவம்பர் 12 ஆம் தேதி 12 மாவட்டங்களிலும் நவம்பர் 13 ஆம் தேதி 8 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
நவம்பர் 12-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களாகும்.
நவம்பர் 13ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அது போல் மற்றொரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 'தமிழ்நாட்டில் உள்ள ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 4-5° செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் வரை குறைந்துள்ளது. அந்த வகையில், அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 35.0° செல்சியஸும், குறைந்தபட்சமாக தருமபுரியில் 19.0° செல்சியஸும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஒன்று நிலவுகிறது. அதனால், இன்று (நவ.9) தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
தொடர்ந்து நவ.12ம் தேதி தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவ.13ம் தேதி கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (நவ.10) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதேபோல அடுத்த ஐந்து நாட்கள் மீனவர்களுக்கு எந்தவிதமான எச்சரிக்கையும் இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications