பகலில் வெயில்.. மாலையில் ஜில்லென பெய்த மழை.. சட்டென்று மாறிய வானிலையால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி
சென்னை: பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில் சென்னையில் பல பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே சென்னையில் மாலை நேரங்களில் ஜில்லென மழை பெய்வதால் இரவில் குளிர் காற்று வீசுவதாவ் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாத பிற்பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தென்மேற்கு பருவமழையை பொறுத்த வரையில் இந்த ஆண்டு இயல்பான மழை குறைவாகவே பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் பகல் நேரங்களில் வெயிலடித்தாலும் மாலை நேரங்களிலும் இரவு நேரங்களிலும் மழை பெய்து வருகிறது. இன்றைய தினம் காலை முதலே வெயில் சுட்டெரித்தது. மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து காற்றுடன் கூடிய கனமழை பெய்தது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிண்டி, கத்திப்பாரா, ஆலந்தூர், குரோம்பேட்டை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. மயிலாப்பூரில் குளிர் காற்று வீசிய நிலையில் லேசான சாரல் மழை பெய்தது. தொடர்ந்து மூன்று நாட்களாக சென்னையில் பல பகுதிகளில் மாலை நேரத்திலும் இரவு நேரத்திலும் மழை பெய்து வருவதால் சென்னையில் வெப்பம் தணிந்து குளுமை பரவியுள்ளது. இன்னும் சில வாரங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்னோட்டமாக சென்னையில் மழை பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications