திருப்பதியில் கருடன் கொடி ஏறிய அடுத்த நாளே திருமலையில் கொட்டிய கனமழை! குளிரால் நடுங்கிய பக்தர்கள்
திருப்பதி: திருப்பதியில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்துவிட்டு வெளியே வந்த போது அவர்கள் மழையில் நனைந்து அவதியடைந்தனர். அது போல் சாலைகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.
திருப்பதியில் புரட்டாசி மாதத்தையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் நேற்று முதல் நவராத்திரியையொட்டி வருடாந்திர பிரம்மோற்சவமும் தொடங்கியது. நேற்று இரவு மலையப்ப சுவாமிகள் பெரிய சேஷ வாகனத்தில் அருள்பாலித்தார்.

இதையடுத்து இன்று காலை சின்ன சேஷ வாகனத்தில் பெருமாள் உலா வந்தார். இரவு அன்ன வாகனத்தில் உலா வந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் திடீரென திருப்பதியில் மழை கொட்டியது. இதனால் 4 மாட வீதிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.
பக்தர்கள் மழையில் நனைந்தபடியே கோயிலை விட்டு வெளியே வருகிறார்கள். கோயில் கோபுரத்தின் எதிரே தேங்காய் உடைக்கும் இடத்தில் இருக்கும் படிக்கட்டுகளில் தண்ணீர் அருவி போல் கொட்டுகிறது. ஏழுமலையானை தரிசித்துவிட்டு வெளியே வந்த பக்தர்களுக்கு ஒதுங்குவதற்குக் கூட இடம் கிடைக்கவில்லை.
மேலும் பல பக்தர்கள் மழையால் கோயிலுக்குள் உள்ள மண்டபங்களில் தங்கியதால் சுவாமியை பார்க்க வரும் பக்தர்களால் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பிறகு 10 நிமிடங்களுக்கு வரிசை முன்னேறிச் செல்லாமல் இருந்த நிலையில் பின்னர் சீரானது.
பக்தர்கள் கோயிலை விட்டு வெளியே வந்து லட்டு வாங்க செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். முழுவதுமாக நனைத்துவிட்டதால் குளிரில் நடுங்கி வருகிறார்கள். இந்த மழையில் பலர் தண்ணீரை கால்களால் அடித்து விளையாடினர். பிரம்மோற்சவம் தொடங்கிய இரண்டாம் நாளான இன்று மழை பெய்ததை பெருமாளின் அருள் என கருதி, பக்தர்கள் சிலர் மகிழ்ச்சி அடைந்தனர்.
எல்லாவற்றிற்கும் மேல் திருப்பதியில் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடி வந்த நிலையில் இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அங்குள்ள அணைகளிலும் சிறிதளவு தண்ணீர் இருக்கிறது. இனி வடகிழக்கு பருவமழை என்பதால் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications