நாளை ஆரஞ்சு அலர்ட்.. இன்றே ஆரம்பித்த மழை.. சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இரவு முழுக்க மழை கொட்டும்
சென்னை: தமிழகத்தில் மழை காரணமாக ஏற்கனவே நாளைய தினம் சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இப்போதே நகரின் சில இடங்களில் மழை ஆரம்பித்துவிட்டது. இதற்கிடையே தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு உட்பட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்தது. இதன் காரணமாகத் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. டிசம்பர் வரையிலும் மழை பெய்யும் என்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு அலர்ட்
மேலும், தமிழகத்தில் நாளைய தினம் 15 மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 7 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. மக்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
13 மாவட்டங்கள்
இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.
இந்த மழையால் சாலைகளில் நீர் தேங்கலாம் என வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் இதன் காரணமாக டிராபிக் பாதிப்பும் ஏற்படும் என்பதால் பொதுமக்கள் அதற்குத் தகுந்தபடி திட்டமிட்டுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வானிலை மையம்
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், "நேற்று (15-11-2025) இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று (16-11-2025) காலை 0830 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு- வட மேற்குத் திசையில் மெதுவாக நகர்ந்து செல்லக்கூடும்.
இதன் காரணமாக இன்று கடலோரத் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிகக் கனமழையும், விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
ஆரஞ்சு அலர்ட்
நாளைய தினம் கடலோரத் தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிகக் கனமழையும், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications