அடுத்த ரவுண்டு ஸ்டார்ட்.. தென்தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை மட்டும்தான்.. வந்த புதிய அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை கொட்டி வருகிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் நாளை தொடங்கி அடுத்த 3 நாட்களுக்குத் தென் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கோவை உட்படச் சில மேற்கு மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி வானிலை மையம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இப்போது வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், பல்வேறு வட தமிழக மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கூட கடந்த மாதம் நல்ல மழை பெய்திருந்தது. கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த மாதம் மழை சற்று குறைந்தாலும் கூட பரவலாகப் பெய்தே வருகிறது.

தமிழ்நாடு கிளைமேட்
கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் (தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்) மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்சமாக குழித்துறை (கன்னியாகுமரி) 40 மிமீ மழை பெய்துள்ளது, முள்ளங்கினாவிளை (ராமநாதபுரம்), அடையாமடை (கன்னியாகுமரி), பாம்பன் (ராமநாதபுரம்) பகுதிகளில் 30 மிமீ மழை பெய்துள்ளது.
வரும் நாட்களிலும் கூட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும் என்றே வானிலை மையம் கூறியுள்ளது. நாளை தொடங்கி அடுத்த 3 நாட்களுக்குத் தென்தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையிலும் கூட ஓரிரு பகுதிகளில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை இருக்கா?
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த ரவுண்டு ஸ்டார்ட்
நாளைய தினம் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 12ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் நாட்கள்
நவம்பர் 13ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 14 முதல் 16 வரையிலான நாட்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை கிளைமேட்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (10-11-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (11-11-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். வரும் நவம்பர் 14ம் தேதி வரை மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications