கோவை டூ குமரி வரை.. இன்று 10 மாவட்டங்களில் கனமழை கொட்டும்.. வானிலை மையம் கணிப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று நெல்லை, தூத்துக்குடி, குமரி, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் தென்கிழக்கு வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி உருவாவதால் தமிழகத்தில் வரும் 8, 9, 10 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்தது. தென் மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்தது. தென்காசி, குமரி, நெல்லை மாவட்டங்களில் இன்று மதியம் கனமழை பெய்தது. குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் கடையம், அம்பாசமுத்திரம், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் காலையில் வெயில் அடித்தாலும் மதியம் 1 மணியளவில் கனமழை கொட்டி தீர்த்தது.

இந்த நிலையில் இன்று மற்றும் வரும் 8, 9, 10 ஆகிய நாட்களில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்கிழக்கு வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி உருவாகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று கோவை, திருப்பூர், நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோன்று வரும் 10 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக வரும் 8, 9 , 10ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications