தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு சான்ஸ்! அனலுக்கு நடுவே ஜில் அப்டேட் தந்த வானிலை மையம்
சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், தென்காசி, குமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையிலும் இன்று ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக தென் மாவட்டங்கள் மற்றும் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்து வருகிறது. வெயில் ஒருபக்கம் கொளுத்தி எடுத்தாலும் அவ்வப்போது இங்கு மழை பெய்து வருகிறது. சென்னை உள்பட வட மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகம் உள்பட தென் இந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பு நிகழ்கின்றது. இதேபோல் குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் இன்று ஒரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக, இன்று கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தென்காசி மற்றும் குமரி ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோன்று காரைக்கால், புதுச்சேரியிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் ஒருசில இடங்களில் வரும் 25 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் இன்றும் நாளையும் அதிகப்பட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும். சென்னையை பொறுத்தவரை இன்று பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு வானிலை மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications