2 கோடி பேருக்கு சென்ற “அலர்ட் மெசேஜ்”.. 8 மாவட்டங்களில் கனமழை கொட்டப்போகுது.. மீட்புப் படைகள் தயார்!
சென்னை: 8 மாவட்டங்களில் 2 கோடி பேருக்கு கனமழை எச்சரிக்கை குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது. வரும் நாட்களில் கனமழை கொட்டப்போவது பற்றி முன்னெச்சரிக்கையாக 2 கோடி பேருக்கு அலர்ட் மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது.
தென்தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி இராமநாதபுரம், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 8 மாவட்ட மக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் பேரிடர் மேலாண்மைத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2 கோடி பேருக்கு செல்போனில் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்ட மக்களுக்கு செல்போன் வாயிலாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. 8 மாவட்டங்களில் உள்ள 2 கோடி பேருக்கு நேற்றும் இன்றும் அலர்ட் மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 9 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. கன்னியாகுமரி, கோவை, நெல்லை, நீலகிரி மாவட்டங்களில் பேரிடர் மீட்புப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பேரிடர் மேலாண்மைத்துறை அறிக்கை: இது குறித்து பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் இயல்பை விட அதிகரித்து காணப்பட்ட நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் 21.05.2024 முடிய பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. இன்று காலை 8.30 மணி வரை தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் மழைபொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், சராசரியாக 0.72 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
அதிகப்படியாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 5.35 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பின்வரும் 9 மழைமானி நிலையங்களில் கனமழை முதல் மிக கனமழை பதிவாயுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இடி மின்னல் தாக்கியதன் காரணமாக உயிரிழப்பு பதிவாகியுள்ளது. ஒரு கனமழையின் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 15 கால்நடை இறப்புகள் ஏற்பட்டுள்ளதோடு 7 குடிசைகள் / வீடுகள் சேதமடைந்துள்ளன. கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ள நிலையில், பேரிடர் சூழலை திறம்பட கையாள்வதற்கு வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறையினை பின்பற்றி, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு 15.5.2024 அன்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை: மேலும், குமரிக் கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை அடுத்துள்ள தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்சொன்ன பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை மையத்திலிருந்து எச்சரிக்கை வரப்பெற்றுள்ள நிலையில், மீன்வளத் துறை ஆணையர் மூலம் மீனவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை மெசேஜ்: கடலோரப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் மீனவர்களுக்கு பலத்த காற்று, கடல் அலை குறித்தும், பொதுமக்களுக்கு கடல்சீற்றம் குறித்தும் எச்சரிக்கை தகவல்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள சுமார் 2 கோடி செல் பேசிகளுக்கு பொதுவான எச்சரிக்கை நடைமுறை (Common Alert Protocol) மூலம் நேற்றும் (18.05.2024), இன்றும் (19.05.2024) எச்சரிக்கை குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளது.
பேரிடர் மீட்புப் படை: கன மழை எச்சரிக்கையினைத் தொடர்ந்து, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினைச் சார்ந்த 296 வீரர்கள் அடங்கிய 9 குழுக்கள், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்திற்கு 18.5.2024 முதல் 20.5.2024 முடிய மூன்று நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் போதிய பாதுகாப்புடன் வரவேண்டும் என்றும், சுற்றுலா வருவதை தவிர்க்க எண்ணினால் தவிர்க்கலாம் என்று பொது மக்களது பாதுகாப்பு கருதி நீலகிரி மாவட்ட ஆட்சியர் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார். மாநில மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் கூடுதல் அலுவலர்களுடன் 24 மணிநேரமும் செயல்பட்டு வருவதோடு, நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications