சுத்துப்போட்ட கருமேகம்.. சென்னையில் வெளுக்கும் கனமழை! புறநகர் பகுதிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
சென்னை: சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் வேறு எங்கெல்லாம் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் லிஸ்டை வெளியிட்டுள்ளது.
தென்னிந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழையானது மே மாதம் இறுதியிலும், ஜூன் மாதம் 1ம் தேதியும் தொடங்கும். ஆனால் இந்த முறை எதிர்பார்த்ததைவிட ஒரு வாரம் தாமதமாகவே தொடங்கியது. இந்த மழையால் முதலில் பயன்பெறும் மாநிலம் கேரளம்தான். அதன் பின்னர்தான் தமிழ்நாடு, கர்நாடா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் பயன்பெறும்.

ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைந்ததால் பல இடங்களில் வெயில் வாட்டி எடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் 90 சதவிகிதமும், அதற்கு முன்னர் ஜூன் மாதத்திலும் பருவமழை 65 சதவிகிதம் என மொத்தமாக இந்த முறை பருவமழை 45 சதவிகிதம் குறைந்திருக்கிறது. இதேபோல கர்நாடக மாநிலத்தை பொறுத்த அளவிலும் பருவமழை குறைந்ததால் கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட அணைகளுக்கு போதுமான நீர் வரத்து குறைந்தது.
இருப்பினும் தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மாதத்தில் இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகியிருந்தது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் 239.9 மி.மீ (76% கூடுதல் மழை), செங்கல்பட்டு மாவட்டத்தில் 107.3 மி.மீ (16% குறைவு), காஞ்சிபுரத்தில் 158.5 மி.மீ (12% கூடுதல்) என தமிழ்நாடு முழுவதும் பரவலாக 95 சதவிகிதம் மழை கூடுதலாக பெய்திருக்கிறது. இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான முதல் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அம்பத்தூர், கும்மிடிப்பூண்டி பகுதிகளில் மிதமான மழையும், ஊத்துக்கோட்டை, பொன்னேரி பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதேபோல பூவிருந்தவல்லி, மாதவரம் பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தவிர திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.
மற்ற மாவட்டங்களை பொறுத்த அளவில் கரூர், திண்டுக்கல், விருதுநகர் மற்றும் ராமநாதபுரத்திலும் சில இடங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக ஆய்வு மையம் கூறியுள்ளது. தற்போது சென்னையில் முகப்பேர், அரும்பாக்கம், அம்பத்தூர், அண்ணாநகர், கோயம்பேடு, அமைந்தகரை, வில்லிவாக்கம், அயனாவரம், மாதாவரம், பாடி, ஓட்டேரி, ரெட்டேரி பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications