டெல்டாதான் டார்கெட்.. 7 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! வானிலை அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று வங்கக்கடலோர மாவட்டங்களில் 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல சென்னைக்கு இன்று காலை 7 மணி வரை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை சற்று தீவிரமடைந்து வருகிறது. தென்மேற்கு பருவமழையை போல இது, இயல்பை விட அதிக மழைப்பொழிவை கொடுக்கவில்லை என்றாலும் கூட, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இயல்பான அளவுக்கு மழையை கொடுத்திருக்கிறது. கடந்த அக்.1ம் தேதி தொடங்கி நேற்று வரை 265.3 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இது இயல்பை விட 2% குறைவாகும். சென்னையில் 504.3 மி.மீ மழை பெய்திருக்கிறது. இது இயல்பை விட 1% அதிகம்.

சென்னையை தவிர, கோவை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை இயல்பை விட அதிக அளவில் பெய்திருக்கிறது. இந்நிலையில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது, “தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
எனவே இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக
ராமநாதபுரம்
புதுக்கோட்டை
தஞ்சாவூர்
திருவாரூர்
நாகப்பட்டினம்
மயிலாடுதுறை
கடலூர்
என டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 16 மற்றும் 17ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
18ம் தேதி தொடங்கி 20 வரை தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தவிர, இன்று காலை 7 மணி வரை சென்னை உட்பட 12 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல ராணிப்பேட்டை தொடங்கி கன்னியாகுமரி வரை 6 மாவட்டங்களுக்கு லேசான மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications