தூத்துக்குடிக்கு குட் நியூஸ்.. இன்றுடன் டாடா சொல்லும் மழை! தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணிப்பு
தூத்துக்குடி: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசியில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் இன்றுடன் தென் மாவட்டங்களில் மழை முடிவடையும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தமிழகத்தை நோக்கி நகரும் என்றும், இதன் காரணமாக தென் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இதேபோல நேற்றும், நேற்று முன்தினமும் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்திருந்தது. மழை காரணமாக கடும் வெள்ளம் ஏற்பட்டிருந்தது. குறிப்பாக நெல்லையில் நேற்று முன்தினம் 50 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியிருந்தது.

இதனால் பழைய பேருந்துநிலையம், அம்பாசமுத்திரம், விக்ரமசிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகள் முற்றிலுமாக மழை நீரால் சூழ்ந்தன. தென்காசியில் ஆலங்குலம், பாவூர்சத்திரம் மற்றும் செங்கோட்டையும் கனமழையால் பாதிக்கப்பட்டது. கனமழை காரணமாக செங்கோட்டையிலிருந்து கேரளா செல்லும் சாலையை ஒட்டியுள்ள குளத்தில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தமிழக-கேரளாவுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன.
இப்படி இருக்கையில் இன்றும் அதிகாலை முதல் தூத்துக்குடி, நெல்லையில் கனமழை பெய்து வருகிறது. இரண்டு மாவட்டங்களுடன் சேர்த்து தென்காசியிலும் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. குற்றாலம் அருவி, தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இன்னும் குறையாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியிருக்கிறது. துக்காணி ஆற்றுபாலத்தை தொட்டு வெள்ளம் செல்கிறது. குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி யானை ஒன்று உயிரிழந்திருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலியில் உள்ள மணிமுத்தாறு அணைக்கு நேற்றைவிட இன்று நீர் வரத்து கொஞ்சம் குறைந்திருக்கிறது. இந்த அணையில் மொத்த கொள்ளளவான 118 அடியில், தற்போது 91 அடி வரை நீர் இருக்கிறது. பாபநாசம் அணையில் 143 அடி கொள்ளளவில் 82 அடி வரை நீர் இருக்கிறது. இருப்பினும் அணையிலிருந்து 2000 கனஅடி வரை நீர் திறக்கப்பட்டிருக்கிறது. நெல்லை தாமிரபரணி ஆற்றில் 70,000 கனஅடி வரை நீர் செல்வதால் கரையோரம் இருந்த மக்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
தூத்துக்குடியை பொறுத்தவரை கோவில்பட்டி- இளையரசனேந்தல் சாலை, நாகலாபுரம்- கே.துரைச்சாமிபுரம் சாலை,புதுப்பட்டி- வேடப்பட்டி சாலை, ஆதனூர்-மிளகுநத்தம் சாலை, பட்டினமருதூர்- குளத்தூர் இடையேயான கிழக்கு கடற்கரை சாலை வெள்ளம் காரணமாக துண்டிக்கப்பட்டிருக்கிறது. நகர பகுதிகளை பொறுத்தவரை ராஜீவ்நகர், தபால் தந்தி காலனி, முத்தம்மாள் காலனி தொடர்ச்சி, ராம்நகர் ஆகிய இடங்களில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்திருக்கிறது.
இந்நிலையில் இன்றுடன் தென் மாவட்டங்களில் மழை முடிவுக்கு வரும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நாளை முற்றிலுமாக மழை நின்றுவிடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications