நீலகிரியில் கொட்டித்தீர்த்த கனமழை.. தண்டவாளத்தில் விழுந்த மரங்கள்.. மண் சரிவு.. மலை ரயில் ரத்து
உதகை: கனமழை காரணமாக நீலகிரியில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக கல்லார் முதல் அடர்லி வரை மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் நீலகிரி மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
நீலகிரி மலை ரயில் சேவை மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரயிலில் பயணம் செய்து அங்குள்ள இயற்கை சூழலை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னை முதல் கன்னியாகுமரி வரையில் பல ஊர்களில் கனமழை பெய்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, தென் மாவட்டங்களில் பரவலாகவும், வட மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 8 செ.மீ. திருநெல்வேலி மாஞ்சோலை, ராதாபுரம், காக்காச்சியில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்துள்ள கனமழை காரணமாக கல்லார் முதல் அடர்லி வரை மலைப்பாதையில் மரங்கள் விழுந்து மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மண்சரிவு காரணமாக நீலகிரி மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மதுரையில் விட்டு விட்டு பெய்த கனமழையால் தாழ்வான இடங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. திருநெல்வேலியில் பெய்து வரும் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சிவகங்கை, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் நாளைய தினம் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications