நெல்லையை விடுங்க..தேனியையும் கொஞ்சம் பாருங்க! டிப்பரையே அடித்துச் சென்ற வெள்ளம்.. தவிக்கும் மக்கள்!
தேனி: தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கில் சிக்கி டிப்பர் லாரி அடித்துச் செல்லப்பட்டது. கிளீனர் ஆற்றில் குதித்து நீச்சல் அடித்து உயிர் தப்பிய நிலையில், லாரி மேலே நின்ற ஓட்டுநர் கயிறு கட்டி பத்திரமாக மீட்கப்பட்டார். அதேபோல், கல்லாற்றில் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டதால் வீடு திரும்ப முடியாமல் காட்டுப் பகுதியில் மலை கிராம மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள வெள்ளகெவி ஊராட்சிக்கு உட்பட்டது சின்னூர் மலைக் கிராமம். இந்த மலை கிராமம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது, என்றாலும் இவர்களின் சாலை போக்குவரத்து என்பது பெரியகுளம் பகுதி வழியாகத்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலையில் நேற்று முதல் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பெரியகுளம் பகுதியில் உள்ள கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக பெரியகுளம் வந்து வாங்கிக் கொண்டு சின்னூர் மலைக் கிராமத்திற்கு செல்லும் மலைவாழ் பழங்குடியின மக்கள் ஆற்றைக் கடக்க முடியாத நிலை ஏற்பட்டதால் மலை கிராமத்தில் உள்ள அவர்களது வீடுகளுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் காட்டுப்பகுதியிலேயே காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்சனை குறித்து மலை கிராம மக்கள் கூறுகையில், ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை, தென்மேற்கு பருவமழை காலங்களில் கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள கல்லாறு மற்றும் குப்பம்பாறை ஆறு இரண்டு ஆறுகளில் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டால் பத்து நாட்கள் முதல் 15 நாட்கள் ஆற்றை கடக்க முடியாத நிலை ஏற்பட்டுவதாகவும், இதனால் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்து மாத்திரை உள்ளிட்டவைகள் கொண்டு செல்ல முடியாத நிலையில்,
விளைந்த விளைபொருட்களை விற்பனைக்காக பெரியகுளம் கொண்டு செல்ல முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிப்பதோடு, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இதேபோன்று ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பத்து நாட்களாக கடக்க முடியாத நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண்ணை சிகிச்சைக்காக கொண்டுவர முடியாத நிலையில், நீர் வற்றிய பின் கொண்டு வந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உயிரிழந்தார் என்கின்றனர்.

மேலும் மழை காலங்களில் தொடர்ந்து மலை கிராம மக்கள் ஆற்றைக் கடக்க முடியாத நிலையில், பாலம் கட்டித் தர 50 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும்,பெண் உயிரிழப்பிற்கு பின் பாராளுமன்ற உறுப்பினர் அரசு அதிகாரிகள் வந்து நேரில் பார்வையிட்டு ஒரு மாத காலத்திற்குள் பணிகள் துவக்கப்படும் என்று கூறியும் இதுவரையில் எந்த பணிகளும் துவக்கப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
இதேபோல், தேனி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பெய்த தொடர் கனமழை காரணமாக கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. போடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து கண்மாய்களும் ஏற்கனவே நிரம்பியுள்ளதால் போடி அணை பிள்ளையார் தடுப்பணையிலிருந்து,கொட்டக்குடி ஆற்று வழியாக வரும் நீர் முழுவதும் வைகை அணைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோடாங்கிபட்டி பகுதியில் உள்ள ஒரு குவாரிக்கு சென்ற டிப்பர் லாரி லோடு ஏற்றிக்கொண்டு மீண்டும் கொட்டக்குடி ஆற்று வழியாக திரும்பி உள்ளது. ஆற்றில் நீர்வரத்து மிகவும் குறைவாக இருந்த நிலையில் ஓட்டுநர் ஆற்றைக் கடக்க முயற்சித்துள்ளார். அப்போது திடீரென ஆற்றில் அதிகப்படியான நீர் வரத் தொடங்கியுள்ளது. சிறிது நேரத்தில் லாரி மூழ்கும் அளவிற்கு நீர் வர தொடங்கியதால் ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆற்று நீரில் குதித்தனர்.
நீச்சல் தெரிந்த கிளினர் ஆற்று நீரில் நீச்சல் அடித்து மறுகரைக்கு சென்று சேர்ந்த நிலையில்,நீச்சல் தெரியாத ஓட்டுநர் லாரியின் மேல் பகுதியில் ஏறி நின்று கூச்சலிட்டுள்ளார். பின்னர் கிளீனர் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் கயிறு கட்டி ஓட்டுனரை பத்திரமாக மீட்டனர். சிறிது நேரத்தில் ஆற்று நீரின் வேகம் அதிகரித்ததால் டிப்பர் லாரி ஆற்றில் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. ஆற்று நீரில் இருந்து தப்பிய ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகிய இருவரும் அப்பகுதியில் இருந்து சென்று விட்டனர்.

பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பொக்லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டு சுமார் ஒரு மணி நேரம் போராடி நீரில் இழுத்துச் செல்லப்பட்ட டிப்பர் லாரி இழுத்து கரைக்கு கொண்டு வரப்பட்டது.












Click it and Unblock the Notifications