அடுத்த 3 மணி நேரம்! டமால் டுமீலுடன் விட்டு விளாசப் போகும் கனமழை.. சென்னை + 11 மாவட்டங்களுக்கு அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விழுப்புரம் மற்றும் கடலூரில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு நிற எச்சரிக்கையும், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. தென் மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. இதனால் கோடை வெயில் தெரியாமலேயே, மழைக்காலங்களில் இருந்தது போல் ஜில் கிளைமேட் இருந்தது.

நெல்லை, தென்காசி, சென்னையில் மழை
அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்தே கிட்டத்தட்ட இப்படித்தான் தமிழகத்தில் வானிலை இருந்து வந்தது. குறிப்பாக கடந்த ஒரு வாரம் வெயிலே இல்லாத அளவுக்கு ஜில் கிளைமேட் இருந்தது. நேற்று முன் தினம் முதல் மீண்டும் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. விட்டு விளாசிய வெயிலால் மக்கள் அவதியடைந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை மற்றும் இன்று மாலை நேரங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்தது.
குறிப்பாக தென்காசி, நெல்லை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இன்று மதியம் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இதேபோல் சென்னையிலும் இன்று இரவு திடீரென கிளைமேட் மாறி மழை வெளுத்து எடுத்தது. திடீரென கனமழை கொட்டித் தீர்த்ததால் பகல் முழுவதும் வாட்டி வதைத்த வெயிலின் வெப்பம் தணிந்து குளிர்ச்சியாக மாறியது சென்னை.
2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், சென்னை, நெல்லை உள்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் இன்று நள்ளிரவு 1 மணி வரை விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேபோல் நள்ளிரவு 1 மணி வரை தமிழகத்தின் நெல்லை, தென்காசி, குமரி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களில் லேசான இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. என்று வானிலை மையம் கூறியுள்ளது. முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
அடுத்த ஒரு வாரத்துக்கு மழை
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 5 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்று (03-06-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
வெப்பநிலை எப்படி?
சென்னையில் நாளை (04-06-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
வெப்ப நிலையைப் பொறுத்தவரை இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications