புயலை எதிர்கொள்வது எப்படி? தலைமைச் செயலாளர் சொன்ன 14 முக்கிய பாயிண்ட்கள்! முழு விவரம்!
சென்னை: வங்கக் கடல் பகுதியில் புயல் சின்னம் உருவாக உள்ளதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா விரிவான ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் 14 முக்கிய பாயிண்ட்களையும் அவர் சொல்லியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை 21.10.2023 அன்று தொடங்கியதிலிருந்து, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

வங்கக் கடல் பகுதியில் புயல் சின்னம் 3.12.2023 அன்று உருவாக உள்ளதைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 2 நாட்களாக பல்துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வு மேற்கொண்டு பேரிடரை திறம்பட எதிர்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, தலைமையில் முக்கியத் துறை அலுவலர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், புயல் மற்றும் கனமழையினை எதிர்கொள்ள பின் வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தலைமைச் செயலாளர் அறிவுரை வழங்கினார்.
*பாதிப்பிற்குள்ளாகக் கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை முன் கூட்டியே நிவாரண மையங்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
*முறிந்து விழக்கூடிய அபாயகரமான மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவதோடு, பலவீனமான மரங்களையும் அகற்ற வேண்டும். அதே போன்று பலவீனமான விளம்பரப் பலகைகள், மேற்கூரை உள்ள ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள் ஆகியவற்றை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
*பலத்த காற்றின் காரணமாக விழும் மரங்களை உடனடியாக அகற்ற போதுமான இயந்திர மர அறுப்பான்கள் மற்றும் குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
*மரம் விழும் நிகழ்வுகளிலும், கனமழையின் போதும், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், காவல் துறையினர் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
*மெட்ரோ ரயில், பெருநகர சென்னை மாநராட்சி, சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் மூலம் தோண்டப்படும் குழிகளுக்கு தடுப்பு ஏற்படுத்தி, விபத்துகள் நிகழ்வதை தவிர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
*உள்ளாட்சி அமைப்புகளும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும், போதுமான மோட்டார் பம்புகள் மற்றும் ஜெனரேட்டர்கள் வைத்திருப்பதோடு, பொதுமக்களுக்கு சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
*பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் உள்ள குடிநீர் / கழிவு நீரேற்று மையங்களில் உயர் அலுவலர்களை நியமித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
*மின் கசிவினால் ஏற்படும் உயிரிழப்புகள் தவிர்க்க வேண்டும் என்றும், புயலின் காரணமாக மின் கம்பங்கள் சேதமடையும் என்பதால், போதுமான மின் கம்பங்கள் மற்றும் இதர மின் உபகரணங்களை இருப்பில் வைத்திருக்க வேண்டும்.
*மருத்துவமனைகளில் தடையில்லா மின்சார வசதி வழங்கும் பொருட்டு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான நிறுவனம் மற்றும் மருத்துவமனை அலுவலர்களுடன் பொதுப்பணித்துறை (கட்டடம் மற்றும் பராமரிப்பு) அலுவலர்கள் ஒருங்கிணைப்புக் கூட்டத்தை உடனடியாக நடத்தி தடையில்லா மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
*அனைத்து பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளுடன் கூட்டம் நடத்தி, 24 மணி நேரமும், அவசர சிகிச்சைப் பிரிவு இயங்குவதையும், மருத்துவமனைகளில் ஜெனரேட்டர் வசதி உள்ளதையும், போதுமான டீசல் இருப்பு உள்ளதையும், ஜெனரேட்டர்கள் உயரமான இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.
*நோய்த் தொற்று பரவலைத் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு, மருத்துவ முகாம்கள் நடத்தவும், முக்கியமாக நிவாரண முகாம்களில் மருத்துவக் குழுக்கள் பணியில் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
*பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
*நிவாரணப் பணிகளுக்கு தேவையான நபர்களை முன்கூட்டியே கண்டறிந்து தேவைப்படும் இடங்களில் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.
*புயல் மற்றும் கனமழையின் தாக்கத்தினை எதிர்கொள்ள அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, புயலின் தாக்கத்தின் காரணமாக ஏற்படும் மனித உயிரிழப்பு மற்றும் சேதங்களை குறைத்திட செயலாற்ற வேண்டும்.












Click it and Unblock the Notifications