குளு குளு டெல்டா.. வெயிலுக்கு நடுவே கொட்டப்போகும் மழை! அடுத்த 3 மணி நேரம் குறித்த மழை அப்டேட்
சென்னை: தமிழ்நாட்டில் பருவமழைக் காலம் முடிவடைந்த நிலையில், தற்போது வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை கடந்த மாதம் 15ம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில், வடக்கு திசையில் இருந்து தெற்கு நோக்கி வீசிய குளிர் காற்றின் காரணமாக குளிரும், பனி மூட்டமும் நிலவி வருகிறது. இன்னும் கோடைக்காலம் தொடங்கவில்லை என்றாலும், வெயில் சுட்டெரித்து வருகிறது. இதற்கு காற்றின் ஈரப்பதம் குறைந்ததே காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

அதிகபட்சமாக ஈரோட்டில் கடந்த 8ம் தேதி 100 டிகிரி வெயில் வாட்டி எடுத்திருந்தது. மேலும், நீலகிரி, கரூர், ராமநாதபுரம், திருப்பத்தூர் மாவட்டங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் வெயில் 90 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகியுள்ளது.
இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் மதியம் 1 மணிக்குள் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்த அளவில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications