"ஆரஞ்ச் அலர்ட்”.. தமிழ்நாட்டில் இன்று மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை!
டெல்லி: தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 12 முதல் 20 செ.மீ மழைக்கு வாய்ப்பு உள்ளதால் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை கனமழை கொட்டித் தீர்த்தது. கூடலூரில் இரு வயல் கிராமங்களில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

தமிழ்நாட்டில் தொடரும் மழை: மேலும், கோவை, தருமபுரி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழையால், ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகள் முழு கொள்ளளவை எட்டின.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் குற்றால அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், பாதுகாப்பு கருதி, சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று ஆரஞ்சு அலர்ட்: இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. தமிழ்நாட்டின் ஓரிரு பகுதியில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 12 முதல் 20 செ.மீ மழைக்கு வாய்ப்பு உள்ளதால் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாளை ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை 7 முதல் 11 செ.மீ மழைக்கு வாய்ப்பு என்பதால் நாளை மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலத்தில் ரெட் அலர்ட்: கர்நாடகாவில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு என்பதால் அங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மஞ்சள், ஆரஞ்சு, ரெட் அலர்ட் என்பது என்ன?: 64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இதுவே, ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும். மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போது ரெட் அலர்ட் விடப்படும். இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டால் போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்று பொருள்.












Click it and Unblock the Notifications