13 மாவட்டங்கள் குறி.. இன்று வெளுக்கப்போகும் கனமழை.. சென்னை நிலவரம் இதுதான்! வானிலை ‛அலர்ட்’
சென்னை: தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் இன்று வானிலை எப்படி இருக்கும் என்பது பற்றிய முக்கிய தகவலும் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மாலை வேளையில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தான் இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது இன்றைய தினம் தமிழ்நாட்டில் உள்ள 13 மாவட்டங்களில் கனமழை வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதோடு தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் பரவலாகவும், வட மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்துள்ளது.
இன்று (நவம்பரம் 21) ம்தேதி 13 மாவட்டங்களில் கனமழை வாய்ப்புள்ளது. அதன்படி திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஈரோடு, சேலம், தருமபுரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் நாளை தென்காசி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
இதுமட்டுமின்றி சென்னையில் நேற்று இரவு முதல் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தான் இன்று சென்னை நகரின் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதோடு சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications