சென்னை உட்பட 9 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு! வானிலை மையம் எச்சரிக்கை!
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம், வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக சென்னை உட்பட 9 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வேண்டும் என வானிலை ஆய்வு மையம் அலர்ட் செய்திருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் வங்கக்கடலில் புயல்கள் உருவாகி வருகின்றன. குறிப்பாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் உருவாகும் புயல்கள் தமிழ்நாட்டை பதம் பார்க்கின்றன. இந்த ஆண்டும் தற்போது புயல் சின்னம் உருவாகியுள்ளது. அதாவது தற்போது சென்னையிலிருந்து 590 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருக்கிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும் என்றும், இப்புயல் சென்னைக்கும்-பரங்கிப்பேட்டைக்கும் இடையே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இருப்பினும், அடுத்த 12 மணி நேரத்தில்தான் இந்த தகவல்கள் அனைத்தும் உறுதி செய்யப்படும். புயல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில், குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கோடியக்கரையில் 17 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. வேதாரண்யம் 12 செ.மீ, திருவாரூர் 12 செ.மீ, தலை ஞாயிறு 10 செ.மீ, மரக்காணத்தில் 11 செ.மீ, தரங்கம்பாடி 10 செ.மீ, செங்குன்றத்தில் 8 செ.மீ என மழை பதிவாகியுள்ளது.
இன்று மதியம் 1 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடிக்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே கடந்த 25ம் தேதி சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி விரைவில் மேற்குறிப்பிட்ட துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழையை பொறுத்தவரை, "இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
29ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
30ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications