அடுத்த ரவுண்டு ஆரம்பம்! டெல்டா மாவட்டங்கள் ஏன் அலர்ட்டாக இருக்கவேண்டும்? வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
சென்னை: நாளை முதல் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் மிக கனமழை முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒருசில இடங்களில் குறுகிய நேரத்தில் கடுமையான மழை பெய்யக்கூடும் என டெல்டா வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் அடுத்த ரவுண்டு ஆட்டம் நாளை தொடங்கவுள்ளது. தமிழகத்தில் சென்னை முதல் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்திற்கு வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து சற்று வலுவடையக்கூடும். இது மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 11-ஆம் தேதி வாக்கில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை - தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாளை (டிசம்பர் 10) கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை மறுநாள் (டிசம்பர் 11) கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், கடலூர், மயிலாடுதுறை. நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு. காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனக் கூறியுள்ளது.
டெல்டா வெதர்மேன் எச்சரிக்கை: குறிப்பாக, வடகிழக்குப் பருவமழையின் இந்த ரவுண்டில் டெல்டா மாவட்டங்கள் அதிக மழையைப் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்டா வெதர்மேன் என்றழைக்கப்படும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர், இதுதொடர்பாக தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இந்த மாதத்தில் தமிழகத்தில் இயல்பை விட மிக அதிக மழை பதிவாக கூடும். வடகடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இயல்பிற்கு மிக மிஞ்சிய மழை பதிவாக கூடும். கடலோரத்தை ஒட்டிய உள் மாவட்டங்களிலும் இயல்பை விட அதிக மழை வாய்ப்பு உள்ளது. மேற்கு மாவட்டங்கள், கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்டங்களில் இயல்பான மழை பதிவாக கூடும் என டெல்டா வெதர்மேன் கூறியுள்ளார்.
டிசம்பர் 10 முதல்: டிசம்பர் 10 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய கூடும். இதுவரை தமிழகம் மூன்று சுற்று மழையை பெற்றுள்ள நிலையில், டிசம்பர் மாதத்தில் அடுத்தடுத்து மேலும் மூன்று சுற்று வடகிழக்கு பருவமழையை எதிர்ப்பார்க்கலாம்.
நான்காவது சுற்று: நான்காவது சுற்று பருவமழை டிசம்பர் 10 ம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை நீடிக்க கூடும். நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி/ தாழ்வு மண்டலம் உருவாகி நான்காவது சுற்று மழையை கொடுக்கும். டெல்டா & வடகடலோர மாவட்டங்கள் டிசம்பர் 11 ஆம் தேதி இரவு முதல் 16 ஆம் தேதிக்கு இடைப்பட்ட நாட்களில் பிரதானமாக மழை பெறகூடும். ஒட்டுமொத்த தமிழகமும் இந்த சுற்றில் மழை பெறும் என்பதும் குறிப்பிடதக்கது.
டிசம்பர் 20 ஆம் தேதியை ஒட்டி தெற்கு வங்ககடலில் மீண்டும் புயல் சின்னம் உருவாகி தமிழக கடற்கரை நோக்கி நகரும், இதன் காரணமாக ஐந்தாம் சுற்று பருவமழை டிசம்பர் 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை எதிர்ப்பார்க்கலாம்.
கூடுதல் எச்சரிக்கை தேவை: ஒட்டுமொத்தமாக டிசம்பர் மாதத்தில் பருவமழை தீவிரமடைந்து மழையை கொடுக்கும் சூழல் உள்ளது. தற்போது தமிழகத்தின் பெரும்பாலான நீர் நிலைகளில் நீர் நிரம்பும் தருணத்தில் இருப்பதாலும், மண்ணில் ஈரப்பதம் வெகுவாக அதிகரித்து இருப்பதாலும் வரக்கூடிய 4 வது, 5ம் சுற்றுகளில் கூடுதல் எச்சரிக்கை தேவை. குறிப்பாக ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் கூடுதல் கவனமும், எச்சரிக்கையும் தேவை.
டெல்டா விவசாயிகள் அலர்ட்: டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்கள் கதிர் பரியும் சூழலில் இருப்பதால் இனி வரக்கூடிய நாட்களில் மிககனமழை, அதித கனமழை வேளாண்மை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். குறுகிய கால பெருமழை நிலச்சரிவு, பெருவெள்ளம் மற்றும் மக்களின் பொருளாதாரம் போன்ற வற்றையும் பாதிப்படைய செய்யும் சூழல் நிலவுகிறது.
தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து சாதகமற்ற நிலையில் உள்ளது. இன்னும் ஃபெஞ்சல் புயலின் ஆரம்ப நாட்களைப் போலவே ஒருங்கிணைக்க போராடுகிறது. இருப்பினும், கடல் மேற்பரப்பு வெப்பநிலை & காற்றலைகள் கடற்கரைகளுக்கு அருகில் சாதகமாகத் தெரிகிறது.
குறுகிய நேரத்தில் அதிக மழைப்பொழிவு: எனவே, தற்போதைய அமைப்பு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடதமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் மிக கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் குறுகிய நேரத்தில் தீவிர மழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். டிசம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதிகள் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய நாட்கள். 13 ஆம் தேதி தமிழகம் முழுவதும் பரவலாக மழையை எதிர்பார்க்கலாம் எனத் தெரிவித்துள்ளார் டெல்டா வெதர்மேன்.












Click it and Unblock the Notifications