அதிகாலையில் சர்ப்ரைஸ் கொடுத்த மழை.. ராஜபாளையம் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி! மழை நீடிக்குமாம்
விருதுநகர்: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும், தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் ராஜபாளையத்தில் மழை பெய்து வருகிறது.
பொங்கலோடு பருவமழை முடிவுக்கு வந்த நிலையில், இரவு அதிகாலையில் கடும் குளிரும், பகல் வேளையில் வெயிலும் வாட்டி எடுத்தது. இந்நிலையில், பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதாவது,

“தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளதால், இன்றும் நாளையும் தென் தமிழகம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்” என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், “தென் மற்றும் டெல்டா மாவட்டங்களை தவிர இதர மாவட்டங்களில் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் நிலவ வாய்ப்புள்ளது. வரும் 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.
ஜன. 31-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை அளவுகளின்படி உதகையில் 7 டிகிரி. கொடைக்கானலில் 10 டிகிரி, குன்னூர் மற்றும் ஏற்காட்டில் 13 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இன்று அதிகாலை முதல் பரவலான மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications