சென்னையில் பகலில் பயங்கரமான வெயில் .. இரவில் வெளுக்கும் மழை .. அடியோடு மாறிய வானிலை
சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக இருந்து வந்த நிலையில் இந்த மழை மண்ணை மட்டுமல்ல மக்களையும் குளிர வைத்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், "சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36°-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 28°-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறியிருந்தது.

சென்னை வானிலை ஆய்வு மையம் சொன்னது போலவே இன்று சென்னையில் காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த ஒரு வாரமாக வெயில் கடுமையாக இருந்து வந்தது. வெப்ப நிலை பகலைவிட இரவில் மிக அதிகமாக தெரிந்தது. இரவில் மிக புழுக்கமாக இருந்தது. குறிப்பாக மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரையில் வீடுகளுக்குள் மக்கள் உட்காரவே முடியாஅளவிற்கு இருந்தது.
இன்று பகலில் வெயில் மிகவும் கடுமையாக இருந்தது. கோடைக்காலத்தில் உள்ளது போன்று வெயில் வாட்டி வதைத்ததால், வீடுகளை விட்டு வெளியில் சென்ற மக்கள் பரிதவித்து போனார்கள். இன்றை வெயிலை பார்க்கும் போது, கண்டிப்பாக மழை வரும் என்று மக்களே எதிர்பார்த்தார்கள்..
எதிர்பார்த்தது போலவே கனமழை வெளுத்து வாங்குகிறது. பள்ளிக்கரணை, மேடவாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், கிண்டி, பல்லாவரம், தாம்பரம், மயிலாப்பூர், அடையாறு , புழல், ஆதம்பாக்கம் என எல்லா பகுதிகளில் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வீடுகளுக்குள் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை ஏற்பட்டுள்ளது.
அதேநேரம் சாலைகளில் பயணிக்கும் மக்கள் உடனடியாக மழை நிற்கும் வரை ஒதுங்கி நிற்பது நல்லது. ஏனெனில் ஜிஎஸ்டி சாலை உள்படபல்வேறு சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.மடிப்பாக்கம் உள்பட மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் பகுதிகளில் வாகனங்களில் மட்டுமல்ல, நடந்து செல்வதையும் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் சாலை எது, மழை நீர் வடிகால்கள் எது என்பது தெரியாத அளவிற்கு நிலைமை இருக்கிறது. மழை காரணமாக மின் வயர்கள் சரிந்து விழும் வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருப்பது நல்லது.












Click it and Unblock the Notifications