காரைக்குடியில் வெறும் 2 மணி நேரத்தில் 154 மில்லி மீட்டர் மழை.. சாக்கடையால் வந்த பெரிய சிக்கல்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் முழுவதும் நேற்று மாலை மிக கனமழை பெய்தது. அதிபட்சமாக காரைக்குடியில் 154 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இந்த கனமழையால் காரைக்குடியில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. வீடுகளுக்குள் மழை நீர் புகுந்த காரணத்தால் மக்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். அப்படி வீட்டிற்குள் சிக்கி தவித்தவர்களை அப்பகுதியினர் பத்திரமாக மீட்டனர்.
வடகிழக்கு பருவ மழை இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.. ஆனால் அதற்கு முன்பாக தமிழகத்தில் பரவலாக மழை தொடங்கிவிட்டது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் நேற்று மாலை மிக கனமழை பெய்தது. மிக குறைந்த நேரத்திலேயே காரைக்குடி பகுதியில் 154 மில்லி மீட்டர் மழை பெய்தது. வெறும் இரண்டு மணி நேரத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஏராளமான இரு சக்கர வாகனங்கள் மழை நீரில் மூழ்கின.

காரைக்குடியில் பெய்யும் மழை நீர் கொப்புடை அம்மன் கோவில் தெப்பக்குளத்திற்கு போகும். அங்கிருந்து மடை வழியாக காரைக்குடி நாட்டார் கண்மாய்க்கு செல்லும். ஆனால் செக்காலை ரோட்டில் இருந்து ஐந்து விளக்கு, கண்ணன் பஜார், டெலிபோன் எக்ச்சேஞ்ச், கல்லுகட்டி வரை ஆக்கிரமிப்புகளாலும், கால்வாய்கள் நீண்ட காலம் தூர்வாரப்படாதாலும் கண்ணன் பஜார் பகுதியில் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் வியாபரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

தீபாவளி நெருங்கி வரும் நிலையில், ஏராளமான துணிகளை வியாபாரிகள் கொள்முதல் செய்து வைத்திருந்தனர். அவை, மழைநீரில் நனைந்து போனதால் வியாபாரிகள் கவலை அடைந்தனர். இதனிடையே காரைக்குடி மாநகராட்சி நிர்வாகம், சாக்கடை கால்வாய்களை முறையாக தூர்வாராமல் விட்டதாலேயே, மழைநீர் முறையாகச் செல்ல முடியாமல் கால்வாய்கள் நிரம்பி வழிந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்ததாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். சாக்கடைகள் அடைந்து சாக்கடை நீரும், மழை நீரும் சாலைகளில் பாய்ந்தோடிய நிலையில், அதில் தான் மக்கள் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. கால்வாயை தூர்வார காரைக்குடி மாநகராட்சி நிர்வாகம் முற்றிலும் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
இதனிடையே சிவகங்கை மாவட்டத்தில் பெய்த மழை நிலவரத்தை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இதன்படி காரைக்குடியில் 154 மில்லி மீட்டர் மழையும், சிவகங்கையில் 52 மில்லி மீட்டர் மழையும், திருப்பத்துரில் 32 மில்லி மீட்டர் மழையும், தேவகோட்டையில் 26 மில்லி மீட்டர் மழையும், திருமயத்தில் 22 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. இளையங்குடியில் 20 மில்லி மீட்டர் மழையும், மானாமதுரையில் 10 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. மொத்தமாக பார்த்தால் மாவட்டம் முழுவதம் 350 மில்லி மீட்டர் மழையும், சராசரியாக பார்த்தால், 38.6 மில்லி மீட்டர் மழையும் நேற்று பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications