மழை அடிச்சு ஊத்துது.. கிருஷ்ணகிரி, கடலூர் உட்பட இந்த 5 மாவட்டங்களுக்கும் ஜாக்கிரதை.. வந்தது அறிவிப்பு
சென்னை: தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும்நிலையில், குறிப்பிட்ட 5 மாவட்டங்களுக்கு மட்டும் வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.. குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் மழை தொடரும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது.

இன்றைய தினம்கூட, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.
இடி மின்னல்: அதனால், இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
நாளை 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இன்னும் ஒரு வார காலத்துக்கு பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிகிறது. சமீப நாட்களாக பெய்த மழையால், தமிழகத்தின் நீர்நிலைகள் நிரம்பி உள்ளன..
காவிரி நீர்: குறிப்பாக, கடந்த ஒரு வாரமாகவே, தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 18-ந் தேதி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2ஆயிரத்து 556 கனஅடி நீர் வந்தது.. மறுநாள் 19-ந் தேதி 2ஆயிரத்து 844 கனஅடி தண்ணீர் வந்தது. இதற்கு அடுத்தநாள் 20-ந் தேதி, நீர்வரத்து 2ஆயிரத்து 938 கனஅடியாக அதிகரித்தது.
நேற்றுமுன்தினம் 3ஆயிரத்து 367 கனஅடியாக உயர்ந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 4ஆயிரத்து 421 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

5 மாவட்டங்கள்: அதேபோல, 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.. காரணம், கர்நாடகாவின் பல பகுதிகளிலும் பரவலாக மழை கொட்டி வருகிறது.. தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவதுடன், கேஆர்பி அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. முழுக்கொள்ளளவான 52 அடி உயரம் கொண்ட இந்த கேஆர்பி அணையின் நீர்மட்டம் 50 அடியை தாண்டியுள்ளது. எனவே, இங்கிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் 1066 கனஅடி தண்ணீரும் அப்படியே வெளியேற்றப்பட உள்ளதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..
கால்நடைகள்: இதனால், கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் ஆற்றின் கரையை கடக்க வேண்டாம் என்றும், ஆற்றில் இறங்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கால்நடைகளை ஆற்றங்கரையேராம் கொண்டு செல்ல வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications