Chennai Rain: வங்கக் கடலில் இன்று உருவாகும் குறைந்த காற்றழுத்தம்! தமிழகத்தில் எங்கெல்லாம் மழை?
சென்னை: வடக்கு வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம், புதுவையில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, மதுரை மாவட்டம் கல்லந்திரியில், 6 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, புதுச்சேரி, 5; மதுரை பெரியபட்டி, சென்னை பெரம்பூர், ஐஸ்ஹவுஸ், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஆகிய இடங்களில் தலா, 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

வடக்கு வங்கக்கடலில், அதாவது மேற்கு வங்கம்- ஒடிஸா கடற்கரைக்கு அப்பால் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில், வரும் 7ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், இன்று முதல், வரும், 5 வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக பதிவாகலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இந்த (செப்டம்பர்) மாதத்திற்கு, வழக்கமான நீண்ட கால சராசரியை விட 109% அதிகமான மழைப் பொழிவுக்கு வாய்ப்புள்ளதாகவும், இந்தியாவில் வட மாநிலங்களான உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை சற்று தாமதமடைந்தாலும் அதிகளவு மழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். பருவமழையின் காரணமாக வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தீவிர மழை பொழிவு இருக்கும் என்றும் சென்னையை பொறுத்தவரை புயல் ஆபத்து வர அதிக வாய்ப்புள்ளதாகவும், தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலம், புயல் போன்ற அமைப்புகள் உருவாகி தமிழகத்தில் அதிக மழை பொழிவு இருக்கும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications