ஜில் ஆக்கிய மழை..தொடர் மழையால் நிரம்பும் அணைகள்! தேனி, திண்டுக்கல் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
தேனி: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் கனமழையால் மஞ்சளாறு அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதால் மஞ்சளாறு ஆற்றில் 566 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில்,
தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள 57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்தது.

நேற்று காலை அணையின் நீர்மட்டம் 52 அடியாக இருந்த நிலையில், படிப்படியாக உயர்ந்து வந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 55 அடியை எட்டியது. அணையின் நீர்மட்டம் 57 அடி என்ற போதும், 55 அடியை எட்டும் போது முழு கொள்ளளவை எட்டியதாக கணக்கிடப்பட்டு உபரி நீர் திறக்கப்படுவது வழக்கம்.
தற்போது அணைக்கு வினாடிக்கு 672 கன அடி நீர் வந்து கொண்டுள்ள நிலையில்,அணையிலிருந்து முதல் கட்டமாக வினாடிக்கு 566 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரித்து, அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்பட வாய்ப்பு இருப்பதால் மஞ்சளாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் மஞ்சளாறு ஆற்றங்கரையோர பகுதிகளான தேனி மாவட்டம் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு,விருவீடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆற்றங்கரை ஓரங்களில் வசிக்கும் மக்கள் மஞ்சளாறு ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என நீர்வளத்துறையினர் அறிவித்துள்ளனர். மஞ்சளாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று 42 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், சோத்துப்பாறை அணையின் முழு கொள்ளளவான 126.28 அடியில் நேற்று காலை நிலவரப்படி 124.11 அடியாக இருந்தது. இந்த நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று பகல் மற்றும் இரவில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து 88 கனஅடியில் இருந்து 670 கன அடியாக உயர்ந்தது.
இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாள் இரவில் 2 அடி உயர்ந்து அதன் முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டிய நிலையில் அணைக்கு வரும் 560 கன அடி உபரி நீர் அப்படியே வெளியேறி வருகிறது. சோத்துப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேறி வருவதால் பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், நடுப்பட்டி, சிந்துவம்பட்டி, குள்ளப்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள வராக நதி ஆற்றங்கரையோர மக்கள் ஆற்றில் குளிக்கவும் ஆற்றைக் கடக்கவும் வேண்டாம் என பொதுப் பணித் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் போது, அணையில் இருந்து நீர் வெளியேற்றமும் அதிகரிக்கப்படும் என பொதுப் பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications