சுழன்றடிக்கும் மேகம்.. அடுத்த 2 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்யும்! வானிலை மையம் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
வழக்கமாக தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில்தான் கோடை வெயில் தொடங்கும். ஆனால், கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் பிப்ரவரி இறுதியில் வெயில் தொடங்கிவிட்டது. மார்ச்சில் ஏற்றம் கண்ட வெயில், ஏப்ரலில் உச்சத்தை தொட்டது. தமிழகத்தின் பரவலான மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகியிருந்தது.

குறிப்பாக ஈரோடு, கோவை, கரூர் என கொங்கு மாவட்டங்கள், அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள், வேலூர், திருப்பத்தூர், திருத்தணி என வட மாவட்டங்களில் வெயில் 105 டிகிரிக்கு அதிகமாக பதிவாகியிருந்தது. இப்படி இருக்கையில் தற்போது கோடை மழை தொடங்கியிருக்கிறது. ஆரம்பத்தில் தென் மாவட்டங்களில் தலையை காட்டிய மழை, கொஞ்சம் கொஞ்சமாக வட மாவட்டங்களை நோக்கி ஏற தொடங்கியது.
100 டிகிரியை தாண்டி வெயில் பதிவான பகுதிகளில் மழை புரட்டி எடுத்தது. ஏற்காடு, ஈரோடு, வேலூர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த மழை தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது. வழக்கமாக டிசம்பர் மாதத்தில்தான் சென்னையில் அதிக மழை பொழிவு இருக்கும். ஆனால் சென்னையில் நேற்று காலை தொடங்கி மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதாவது தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்யும் என்று தெரிவித்திருக்கிறது.
முன்னதாக நேற்று வெளியிடப்பட்டிருந்த வானிலை அறிவிப்பில், "இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும். தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் மதுரை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
நாளை 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
20ம் தேதி 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அன்றைய தினம், திருநெல்வேலியின் மலையை ஒட்டிய பகுதிகள், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, புதுக்கோட்டை, ராமநாதபுரத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல மதுரை, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, திண்டுக்கல், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நீலகிரி, கோவை, திருப்பூருக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
21ம் தேதி, 21 மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக தென்காசி, நெல்லை மற்றும் தேனிக்கு ஆர்ஞ்சு அலர்ட்டும், குமரி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தூத்துக்குடி, ராமநாதபுரம், திண்டுக்கலுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications