சென்னை மக்களே இடி மின்னலாம்.. குடையை மறந்துடாதீங்க! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருவதால் வெயில் குறைந்து குளிர்ச்சியான காலநிலை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், அடுத்த மூன்று நாட்களுக்கு இந்த மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டுக்கு பின்னர் சென்னையில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. அக்னி தொடங்குவதற்கு முன்னரே சதமடித்த வெயில், அக்னி முடிந்த பின்னரும் கூட உக்கிரம் குறையாமல் வாட்டி வதைத்தது. அத்துடன் அனல் காற்றும் மக்களை பெரிதும் சோர்வாக்கியது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களின் வானிலை வெகுவாக மாற்றம் கண்டது.

திடீரென பெய்த மழை காரணமாக மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். நேற்று தமிழ்நாட்டின் வால்பாறை, சேலம், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்திருந்தது. இதில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் புழலில் 17 மி.மீ அளவில் மழை பதிவாகியிருந்து. அதேபோல சென்னையின் வில்லிவாக்கத்தில் 11 மி.மீ மற்றும் நுங்கம்பாக்கத்தில் 10 மி.மீ அளவில் மழை கொட்டி தீர்த்துள்ளது.
இந்நிலையில் மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (ஜூன் 25) முதல் வரும் 27ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்த அளவில், "அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
அதேபோல மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்த அளவில், "24.06.2023 மற்றும் 25.06.2023 ஆகிய தேதிகளில் மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
இதே 26.06.2023 மற்றும் 27.06.2023 ஆகிய தேதிகளில், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி. மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இந்த வங்கக்கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்க போக வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது.
இதே அரபிக்கடல் பகுதிகளை பொறுத்த அளவில், "27.06.2023 வரை இலட்சத்தீவு பகுதிகள், கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கி. மீ வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்" என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications