தலைநகரை புரட்டி எடுத்த மிக்ஜாம் புயல்.. நாளை காலை 9 மணி வரை.. சென்னை விமான நிலையம் மூடல்
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதற்கிடையே கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை காலை 9 மணி வரை சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் வடகிழக்கு பருவமழை குறைவு தான் என்று பேசப்பட்டது. ஆனால் கடந்த மாதம் இறுதியில் பருவமழை சூடுபிடித்தது. அதுவரை வழக்கத்திற்கு குறைவான சதவீத மழையே தமிழகத்தில் பெய்து இருந்ததாக வானிலை மையம் கூறியிருந்தது. ஆனால் கடந்த மாத இறுதியில் இருந்து படிப்படியாக மழை அதிகரித்தது. குறிப்பாக கடந்த 4 நாட்களாக தமிழகத்தில் மழையின் சராசரி சதவீதம் அதிகரிக்க தொடங்கியது.

டிசம்பர் மாத தொடக்கத்தில் நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியபடியே கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயலால் இன்று சென்னை மக்களே மழை வேண்டாம்.. வேண்டாம்.. என்று சொல்கிற அளவுக்கு தலைநகர் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. நேற்று இரவில் இருந்து பெய்ய தொடங்கிய மழை தற்போது வரைக்கும் தொடர்ந்து பெய்து வருகிறது.
இதனால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. மக்கள் எங்கும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சாப்பாடு வாங்குவதற்கோ, அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கூட வெளியில் செல்ல முடியாத அளவிற்கு வெள்ள நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சென்னை மக்களின் அன்றாட வாழ்க்கை அடியோடு முடங்கியது.
இதேபோல் பஸ் சேவை, ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டதோடு விமான சேவையும் முடங்கியுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் விமான சேவையை தொடர முடியாத சூழல் உள்ளது. இந்த நிலையில், நாளை காலை (செவ்வாய்க்கிழமை) 9 மணி வரை சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவையில் இருந்து சென்னை செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications