ஆஃபிஸ் போறீங்களா? சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு வந்த வார்னிங்.. காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி உள்ளது. தற்போது மீண்டும் இந்த பருவமழை வெளுத்து வாங்க தொடங்கி உள்ளது. இதற்கு தென் மேற்கு வங்கக் கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தான் காரணம்.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் மேற்கு திசையில், தமிழகம்-இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி மெதுவாக நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதனால் தமிழகத்தில் நவம்பர் 12 முதல் 17ம் தேதி வரை பல இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் விட்டு விட்டு இரவு முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக சென்னையில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படவில்லை.
இதற்கிடையே தான் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் லேசான இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். இந்த மழையின் காரணமாக சில இடங்களில் தண்ணீர் தேங்கலாம். போக்குவரத்து பாதிக்கப்படலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், ஆஃபிஸ் செல்லும் மக்கள் கவனமாக மழையில் இருந்து தற்காத்து கொள்ள தேவையான நடவடிக்கையை எடுத்து கொள்வது நல்லது.












Click it and Unblock the Notifications