பேய்மழையால் பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் திருசெந்தூர்.. ஸ்ரீவைகுண்டத்தில் ஒரே நாளில் 48 செமீ பதிவு
தூத்துக்குடி: சென்னையில் பெய்த மழையை விட தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் அதிக கனமழை பதிவாகியுள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் ஒரே நாளில் 48 செமீ மழை பதிவாகியுள்ளது. திருச்செந்தூரில் 39 செமீ மழை பதிவாகியுள்ளது. கோவிலுக்குள் பெரு வெள்ளம் சூழ்ந்துள்ளது.
கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழையும் ஓரிரு இடங்களில் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல ஆண்டுகளில் இல்லாத பெருமழை கொட்டித்தீர்த்துள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் ஒரே நாளில் 48 செமீ மழை பதிவாகியுள்ளது. திருச்செந்தூரில் ஒரே நாளில் 39 செமீ மழையும், சாத்தான்குளத்தில் 33 செமீ மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. மக்களின் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் பெருக்கெடுத்துள்ள வெள்ளத்தால் எங்கும் புகை மூட்டமாக காணப்படுகிறது. மக்கள் அருவிக்கரை பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் குற்றாலத்தில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் " தென்காசியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டேன்.
தென்காசி மாவட்டத்தில் முதலமைச்சர் ஆணைக்கிணங்க மழை வெள்ள மீட்புப் பணிகள் மேற்கொள்வதற்காக தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக, 250 பேரிடர் மீட்பு பணி அலுவலர்கள் மூன்று மாவட்டங்களுக்கு பணி அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications