குன்றத்தூரில் நள்ளிரவில் உடைந்த ஏரி! 10 அடி உயர ஏரியிலிருந்து 6 அடி தண்ணீர் வெளியேறியதால் பரபரப்பு!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் குன்றத்தூரில் உள்ள நடுவீரப்பட்டு ஏரி உடைந்து குடியிருப்புகளுக்குள் வெள்ளம் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலத்தை அடுத்துள்ளது நடுவீரப்பட்டு ஏரி. மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஏரிகள் நிரம்பி விட்டன.

இந்த நிலையில் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்ததால் திடீரென ஏரியின் கரை உடைந்து வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கியது. பஜனை கோயில் தெரு, நாகாத்தம்மன் கோயில் தெருக்களில் அதிக அளவு தண்ணீர் சூழ்ந்ததால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த ஏரி ஆக்கிரமிப்பு நபர்களால் உடைக்கப்பட்டதா அல்லது தானாக உடைந்ததா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த ஏரி உடைப்பால் விளை நிலங்களுக்குள் நீர் புகுந்துவிட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மிக்ஜாம் புயலால் பெய்த அடை மழையால் சூழ்ந்த நீர் தற்போது மெல்ல வெளியாகி வரும் நிலையில் இந்த ஏரி உடைப்பு சம்பவம் மக்களை பெரிதும் பாதித்துள்ளது. கடந்த வாரம் கூட புழல் ஏரியின் கரை பலவீனமாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அப்படி எல்லாம் இல்லை, கரைகள் நன்றாக வலுவாக இருக்கிறது என அரசு தெரிவித்தது.
அது போல் ஏரிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் நிலையில் அதை திறந்துவிட்டால் பாதிப்புகள் குறைவாக இருக்கும். உடைந்துவிட்டால் ஊருக்குள் தண்ணீர் வந்து பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். மிக்ஜாம் புயலின் போது செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டது. அது திறக்கப்படாமல் உடைந்து இருந்தால் பாதிப்புகள் அதிகமாக இருந்திருக்கும்.












Click it and Unblock the Notifications