உருவாகிறது.. அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. இரவெல்லாம் ஒரே மழை.. பனியில் மூடிய சென்னை
சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டியது.. சென்னையின் பிரதான சாலைகளில், விடிகாலை நேரத்தில் கடும் குளிர் காரணமாக வாகன ஓட்டிகள் பெருத்த அவதிக்கு ஆளானார்கள்.
தென்கிழக்கு அரபிக்கடல், அதனையொட்டிய மாலத்தீவு பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கனமழை: தொடர் கனமழை எச்சரிக்கை காரணமாக, நெல்லை உட்பட 5 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. அதேபோல, பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 5 மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் சிபிஎஸ்சி என அனைத்தும் இன்று இயங்காது. திங்களன்று அரையாண்டு தேர்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையை பொறுத்தவரை, அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது... இதன் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர். இதன்காரணமாக, புறநகரில் காலை முதலே வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
கோவை: இந்த நிலையில் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளான காரமடை, தேக்கம்பட்டி, வெள்ளியங்காடு, தோலம்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதலே இன்று காலை வரை விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. காரமடை சாஸ்திரி நகர் பகுதியில் தரைமட்ட பாலத்தை மூழ்கடித்துள்ளது.
நீலகிரி: அதேபோல, கிழக்கு திசைக்காற்று மாறுபாடு காரணமாக நீலகிரி மாவட்டத்திலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனால் நீலகிரியின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதலே மழை பெய்து வருகிறது.. மேலும், காலை முதல் கடும் பனிமூட்டத்துடன் மிதமான மழைபெய்து வந்தததால் குளிர் அதிகரித்து காணப்பட்டது . வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை என 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.












Click it and Unblock the Notifications