வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. டிச.16 டூ 19 வரை மீண்டும் கனமழை - வானிலை மையம்
சென்னை: வங்கக்கடலில் அடுத்த 48 மணிநேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதோடு, தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால் வரும் 16ம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. பெஞ்சல் புயல் காரணமாக ஒரு வாரத்துக்கு முன்பு சென்னை மற்றும் அதனை சுற்றிய மாவட்டங்கள் மற்றும் வடக்கு மாவட்டங்களில் அதிக கனமழை கொட்டியது. குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின.

அதன்பிறகு சில நாட்கள் மழை இல்லாத நிலை இருந்தது. இதற்கிடையே தான் வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது கடந்த 10ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.
இதனால் டிசம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் சென்னையில் கனமழை பெய்தது. அதன்பிறகு நேற்று முதல் இன்று வரை தென்தமிழக மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தான் காரணம். இந்நிலையில் தான் இன்று காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளது.
இதனால் மழை படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தான் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இன்று சென்னை வானிலை ஆய்வும் மையம் கூறியுள்ளதாவது: தெற்கு அந்தமான் கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் அதாவது டிசம்பர் 14ம் தேதியில் வளிமண்டல மேலடுக்கு காற்றழுத்த சுழற்சி என்பது உருவாக உள்ளது. இதன் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.
இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடற்கரையை நோக்கி வரக்கூடும்.. இதனால் தமிழகத்தில் வரும் 16ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழையும், 17 ம் தேதி தமிழகத்தில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் டிசம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும்’’ என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ள நிலையில் அடுத்த 48 மணிநேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications