Weather: அடுத்த ரவுண்டு மழை.. 9 ஆம் தேதியே ஆரம்பிக்குதாம்.. டெல்டா வெதர்மேன் கணிப்பு!
சென்னை: சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அடுத்த சுற்று மழை டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்க உள்ளதாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். டிசம்பர் 15 ஆம் தேதிக்குப் பிறகு அடுத்தடுத்து தாழ்வு பகுதிகள் உருவாகக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கியது. இதனையடுத்து மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக டெல்டா மாவட்டங்கள், தென் மற்றும் வட மாவட்டங்கள் என அனைத்து பகுதிகளில் மழை பெய்தது. இதனால் நீர் நிலைகள் ஒரு சில இடங்களில் முழு கொள்ளளவை எட்டியது.

நவம்பர் மாதத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யாமல் வெயில் வாட்டியது. ஒரு சில இடங்களில் மட்டுமே அவ்வப்போது மழை பெய்தது. நவம்பர் இறுதியில் டிட்வா புயல் இலங்கையில் ருத்தரதாண்டவம் ஆடிய கையோடு தமிழகத்தில் நுழைந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. இதனால் சென்னை மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் டிசம்பர் மாதத்தில் மழைப்பொழிவு எப்படி இருக்கும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கணித்துள்ளார். வானிலை நிலவரங்களை அவ்வபோது சமூக ஊடகங்களில் பதிவிடும் டெல்டா வெதர்மேன் என்று அறியப்படும் ஹேமச்சந்தர் மழை நிலவரம் குறித்து தெரிவித்திருப்பதாவது:
"எதிர்மறை இந்தியப் பெருங்கடல் இருமுனை நிகழ்வு தற்போது வலு குறைய துவங்கியுள்ளது. பசிபிக் பெருங்கடலில் லாநினா அமைப்பு முழுமையாக ஆதிக்கம் செலுத்த துவங்கியுள்ளது. லாநினா, எதிர்மறை ஐஓடி (IOD), கடல் வெப்பநிலை, கடல் சார்ந்த அலைவுகளின் சாதகமான நிலைகள் டிசம்பர் மாதத்தில் இயல்பிற்கு அதிக மழைப்பொழிவிற்கு வழி வகுக்கும்.
வானிலை எதிர்பார்ப்பு:
1. டிசம்பர் 10 முதல் 12 ஆம் தேதி வரை காற்றழுத்த தாழ்வு நிலையுடன் இணைந்த கிழக்கில் இருந்து வீசும் காற்றின் காரணமாக 5 ஆம் சுற்று மழை துவங்கி கடலோர மாவட்டங்களில் பரவலாக மழையை கொடுக்கும்.
2. டிசம்பர் 15 ஆம் தேதிக்குப் பிறகு அடுத்தடுத்து தாழ்வு பகுதிகள் உருவாகக் கூடும்.
3. டிசம்பர் 15 முதல் 21-க்கு இடைப்பட்ட நாட்களில் காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாகி பருவமழையை தீவிரப்படுத்தும்.
4. டிசம்பர் 4 வது வாரத்தில் தெற்கு வங்ககடலில் உருவாக கூடிய தாழ்வுப் பகுதி, புயல் சின்னமாக வலுபெற வாய்ப்புள்ளது.
5. ஒட்டுமொத்தமாக டிசம்பர் மாத மழை இயல்பிற்கு அதிகமாக அமைந்து, கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களுக்கு நல்ல மழைப்பொழிவை கொடுக்கும்.
6. வட மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களுக்கு மேலும் இரண்டு தீவிரமான வடகிழக்கு பருவமழை சுற்றுகள் ஜனவரி முதல் வாரத்திற்குள் மழையை கொடுக்கும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications