ஊட்டியை விடாத மழை.. நீலகிரியில் நிலச்சரிவு? விடமாட்டோம்.. களமிறங்கிய கலெக்டர்.. வயநாட்டுக்கு போன டீம்
ஊட்டி: நீலகிரியில் நிலச்சரிவு ஏற்பட்டால் உடனடியாக எடுக்க வேண்டிய மீட்பு பணி குறித்து அறிய சிறப்புக் குழு வயநாடு செல்கிறது. நீலகிரியில் இருந்து வயநாட்டிற்கு சிறப்புக் குழு செல்ல இருப்பதாக மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த சில தினங்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தருத.. இதனை முன்னிட்டு, மழை பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்தவகையில், நீலகிரி மாவட்டத்திலும், கனமழையால் நிலச்சரிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டால், அதை எதிர்கொள்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி வருகிறது...
முன்னெச்சரிக்கை நடவடிக்கை: நிலச்சரிவு ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய மீட்புப் பணிகள் குறித்து அறிய அனைத்துத் துறை அதிகாரிகள் கொண்ட குழு கேரள மாநிலம் வயநாடு சென்று, அங்கு நிலச்சரிவு ஏற்பட்ட பிறகு, மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகள் குறித்து அறிய உள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா செய்தியாளர்களிடம் பேசும்போது, "வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொறுப்பு அமைச்சர் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தினார்கள்.. பால், உணவு மற்றும் ரேஷன் பொருட்கள் தயார் நிலையில் வைக்கும்படியும் அறிவுறுத்தியிருக்கிறார்கள்..
ஊட்டி வருகை: தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தென்மேற்கு பருவ மழை காலத்தில் உதகையில் முகாமிட்டிருந்தனர். இப்போது கோவை சென்றுள்ளனர். அவர்கள் மீண்டும் உதகைக்கு வருவார்கள்.
நீலகிரியில் நிலச்சரிவால் பாதிக்கப்படும் இடங்கள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் உள்ள மக்களை இரவு நேரங்களில் முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முகாம்களை கண்காணிக்க 42 மண்டல அளவிலான குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
டீம் ரெடி: நீலகிரி மாவட்டத்தில் 283 பகுதிகளில் 42 மண்டலக்குழுக்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் மேலும் 40 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 450 நிவாரண முகாம்கள் தயாராக உள்ளன. மிகவும் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் உள்ள மக்களை இரவு நேரங்களில் நிவாரண முகாம்களில் தங்க அறிவுறுத்தியுள்ளோம். தீயணைப்புத் துறையினர் மீட்பு ஒத்திகை நடத்திவருகிறார்கள்.
ஒருவேளை, நிலச்சரிவு ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய மீட்புப்பணிகள் குறித்து அறிய தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுவினர் கேரளாவுக்கு செல்ல உள்ளனர்.
பயங்கர நிலச்சரிவு: வயநாடு சென்று, அங்கு நிலச்சரிவு ஏற்பட்ட பிறகு மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகள் குறித்து அறிய உள்ளனர். ஒருவேளை நீலகிரியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டால், இந்த குழுவினர் துரிதமாக செயல்பட உதவியாக இருக்கும். அத்துடன், மழைநீர் செல்வதற்கு வசதியாக அனைத்து மழை நீர் கால்வாய்களும் தூர்வாரப்பட்டுள்ளன. பருவமழையை எதிர்கொள்ள அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் உள்ளன" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications