இனி மழையும் குளிரும் இல்லை.. தமிழகத்தில் மெல்ல அதிகரிக்கும் வெப்பம்! லிஸ்டில் சென்னையும் இருக்கு
சென்னை: தமிழ்நாட்டில் பருவமழை சீசன் முடிந்த பிறகு மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் குளிரும் மெல்லக் குறைந்து வருகிறது. இப்போது ஓரிரு இடங்களில் மட்டும் குளிர் இருக்கிறது. இதற்கிடையே தமிழகத்தில் வரும் நாட்களில் என்ன மாதிரியான கிளைமேட் நிலவும் என்பது குறித்து வானிலை மையம் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த பருவமழை சீசனில் நல்ல மழை கிடைத்தது. இதனால் மாநிலத்தில் பெரும்பாலான நீர்நிலைகள் நன்கு நிரம்பிவிட்டன. பருவமழைக்குப் பிறகு சில நாட்கள் கடும் குளிர் நிலவி வந்த நிலையில், இப்போது குளிரும் குறைந்துவிட்டது.

அதிகரிக்கும் வெப்பம்:
மாநிலத்தில் மெல்ல வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரைத் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. இன்று காலை சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிதமான பனிமூட்டம் நிலவியது. மாநிலத்தில் எங்கும் குறிப்பிடத்தக்க அளவுக்கு மழையும் இல்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
லிஸ்டில் சென்னை:
வெப்பத்தைப் பொறுத்தவரை அதிகபட்சமாக ஈரோட்டில் 94.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதேநேரம் சென்னை, கன்னியாகுமரி, கரூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பம் என்பது இயல்பில் இருந்து 1.6 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை:
வரும் நாட்களில் என்ன மாதிரியான கிளைமேட் நிலவும் என்பது குறித்தும் வானிலை மையம் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளது. அதன்படி, "இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். பிப்ரவரி 11ம் தேதி முதல் பிப்ரவரி 15ம் தேதி வரை தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 32-33 செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23' செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னை கிளைமேட்:
நாளைய தினம் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-32' செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்றே அதில் கூறப்பட்டுள்ளது.
உலக வெப்பம்:
சர்வதேச அளவிலும் கூட புவி வெப்ப மயமாதல் காரணமாக வெப்பம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. கடந்த ஜனவரி மாதம் இதுவரை பதிவானதிலேயே வெப்பமான மாதமாக அமைந்தது. உலகின் சராசரி வெப்பம் 13.23 டிகிரி செல்சியஸாக உயர்ந்துள்ளது. இது தொழிற்புரட்சிக்கு முந்தைய கால வெப்பத்தை விட 1.75 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.
13.23 டிகிரி செல்சியஸ் அவ்வளவு ஒன்னும் அதிகம் இல்லையே ஏன நீங்கள் நினைக்கலாம். இது உலகின் சராசரி வெப்பம். அதாவது அண்டார்டிக்கா, ஆர்டிக் பகுதிகளில் மைனஸுக்கு கீழ் வெப்பம் இருக்கும் நிலையில், அதை எல்லாம் சேர்த்து சராசரியாகக் கொண்டு வருவதே இந்த சராசரி வெப்பம். ஜனவரி மாதம் இது 13.23 டிகிரியை இதுவரை தொட்டதே இல்லை என்பதே ஆய்வாளர்களின் கவலையாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications