மழை எப்போவோ நின்னுடுச்சு! ஆனா கரண்ட், குடிநீர் இல்ல.. புலம்பும் புளியந்தோப்பு மக்கள்! மீளாத வடசென்னை
சென்னை: புயல் மழையால் சென்னை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வடிந்துவிட்டது. இருப்பினும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு முழுமையாக திரும்பவில்லை. குறிப்பாக வடசென்னையின் பல பகுதிகளில் நிலைமை இன்னும் மோசமாகத்தான் இருக்கிறது.
வழக்கமாக சாதாரண பருவமழைக்கே சென்னை ஒரு மாதிரி கசகச என்றுதான் இருக்கும். இந்நிலையில், கடந்த 4ம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை, ஒட்டு மொத்த சென்னையையும் புரட்டி போட்டுவிட்டது. கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளம் சென்னைக்கு முக்கிய பாடமாக இருந்த போதும், இந்த புயல் மழையை எதிர்கொள்ள முடியவில்லை. மழை நின்று 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் வேளச்சேரி போன்ற புறநகர் சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியவில்லை.

மறுபுறம் சென்னையின் நகர் பகுதிகளான, வட சென்னை பகுதியில் மக்கள் மின்சாரம், குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். வடசென்னையின் பட்டாளம், அம்மையம்மன், திருவொற்றியூரின் சில பகுதிகள், மணிலியின் ராஜீவ்காந்தி நகர் என பல்வேறு பகுதிகளில் மின்சாரம் இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை. இதில் ராஜீவ்காந்தி நகர் பகுதியில் வெள்ள நீர் இன்னும் வடியவில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
பட்டாளம், புளியந்தோப்பு அம்மையம்மன் பகுதிவாழ் மக்கள் இது குறித்து கூறுகையில், "புயல் மழை தொடங்கிய அன்றே வெள்ளம் வந்துவிட்டது. எங்கள் ஏரியாவில் மழை நீர் வடிகால் பணிகள் கடந்த 2-3 மாதங்களாக நடந்து வந்தது. எனவே மழைநீர் தேங்காது என்று நினைத்திருந்தோம். ஆனால் நேரம் செல்ல செல்ல வெள்ளத்தின் அளவு உயர்ந்துக்கொண்டே வந்தது. சிலர் இங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிட்டோம். பலரும் மொட்டை மாடிகளில் தஞ்சம் புகுந்தனர்.
பைக், வாஷிங்மெஷின், ஃபிரிட்ஜ் உள்ளிட்டவை இஎம்ஐ-யில் எடுத்திருந்தோம். ஆனால் வெள்ளத்தால் இவை எல்லாம் முற்றிலும் நாசமாகிவிட்டன. நேற்று இரவுதான் வெள்ளம் முழுமையாக வடிந்திருக்கிறது. தற்போது பட்டாளம் பகுதியில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. புளியந்தோப்பு, அம்மையம்மன் பகுதிகளில் இன்னும் மின்சார விநியோகம் முழுமையாக கொடுக்கப்படவில்லை. வயதானவர்கள், நோயாளிகள், குழந்தைகள், கர்ப்பிணிகள் ஆகியோர் இந்த வெள்ளத்தில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் சென்னையை மேம்படுத்த ஆயிரக்கணக்கான கோடியில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இருப்பினும், புயல் பருவமழை காலங்களில் வெள்ளம் தேங்குவது நடந்துக்கொண்டேதான் இருக்கிறது. இந்த பிரச்னைக்கு அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும். பூர்வகுடி மக்களான எங்களுக்கே சென்னையில் வாழ வழியில்லை என்பது மிகப்பெரிய கொடுமை" என்று கூறியுள்ளனர்.
வடசென்னை பகுதியில் கடந்த சில ஆண்டுகளில் புதியதாக உருவாக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் பெரும்பாலானவை நீர் நிலைகளை ஆக்கிரமித்தே உருவாக்கப்பட்டிருக்கின்றன. எனவேதான் மக்கள் வசிக்கும் பகுதியில் வெள்ளம் தேங்குகிறது. இதற்கு தீர்வு காண்பது எளிதான விஷயமல்ல என்று சூழலியல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர். எப்படி இருப்பினும், மக்களை காப்பாற்ற வேண்டியது அரசின் முதன்மையான கடமையாகும்.












Click it and Unblock the Notifications