வங்கக் கடல் காற்றழுத்தம்- அரபிக் கடல் "தேஜ்" இடையே தொடங்கிய வடகிழக்கு பருவமழை.. எப்படியிருக்கும்?
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது என வானிலை மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் தமிழ்நாடு , கேரளாவில் வடகிழக்குப் பருவமழை இன்று தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கிய நிலையில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வலுவடையும் நிலையில் அரபிக் கடலில் தேஜ் புயல் உருவாகியது.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம், அரபிக் கடல் புயல் ஆகிய இரு காரணிகளும் தமிழகத்தில் மழை தீவிரமடைய வாய்ப்பை ஏற்படுத்தும் என வானிலை மையம் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் தமிழக உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும்.
வரும் 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். வரும் 25 ஆம் தேதி மற்றும் 26 ஆம் தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியல் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25- 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 34- 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25- 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தினம் முகப்பேர், அம்பத்தூர், அரும்பாக்கம், அமைந்தகரை, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications