ஊர் சுத்தி பார்க்கவா வந்தேன்.. களத்தில் இறங்கி வேலை பார்க்கிறோம்.. தூத்துக்குடியில் சீறிய உதயநிதி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு காட்டமாக உதயநிதி பதிலடி கொடுத்தார்.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தென்மாவட்டங்களில் கடந்த 16-ந்தேதி இரவு முதல் விடிய, விடிய லேசான மழை பெய்தது. 17-ந்தேதி அதிகாலை முதல் மழை இடைவிடாமல் தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. பகல் 12 மணி அளவில் இருந்து கனமழை கொட்டித்தீர்த்தது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இந்த மழை பெய்தது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடியில் மிக கனமழை பெய்தது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மிக கன மழை பெய்தது. மணிமுத்தாறு அணை மற்றும் அருவியின் மேல் பகுதியில் அமைந்திருக்கும் தேயிலை தோட்ட பகுதிகளான மாஞ்சோலை, காக்காச்சி பகுதிகளில் தலா 20 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்தது. இதனால் மணிமுத்தாறு அருவி வழியாக அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கன அடிக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது.
மணிமுத்தாறு அருவி இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு மூழ்கியவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது. இதனால் மணிமுத்தாறு அணை நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் அணைக்கு வந்த தண்ணீர் முழுவதும் திறந்து விடப்பட்டது. பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து திறந்து விடப்படும் உபரி தண்ணீர் மற்றும் காட்டாறு வழியாக வரக்கூடிய வெள்ளநீர் ஆகியவை தாமிரபரணி ஆற்றில் கலந்து ஓடுகிறது.
செல்போன் நெட்வொர்க்: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் மழை காரணமாக ஒரு லட்சம் கன அடி தண்ணீர் வந்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நூற்றுக்கணககான கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கானி, ஏரல், பழையகாயல் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் வெளியே வர முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அப்பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மின்சார சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் செல்போன் நெட்வொர்க்கும் முடங்கியுள்ளது. தற்போது மழை விட்டுள்ளதால் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் ஆய்வு: ஹெலிகாப்டர் மூலமாகவும் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புக்குழுவினருடன் இணைந்து தமிழக அரசு அதிகாரிகளும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அமைச்சர்களும் மழை பாதித்த இடங்களில் ஆய்வு செய்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டு வருகின்றனர். குறிப்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் முகாமிட்டு மீட்பு பணிகளை முடுக்கி விட்டு வருகிறார்.
இந்த நிலையில், நேற்று நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நிவாரண பணிகள் சரிவர நடைபெறவில்லை என்றும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை எனவும் விமர்சித்து இருந்தார். எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் குறித்து அமைச்சர் உதயநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
ஊர் சுத்தி பார்க்கவா: இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "இப்போ என்ன பண்ணிட்டு இருக்கிறோம்... ஊர்சுத்தி பார்க்க வந்து இருக்கிறோமா.. எல்லா இடத்திலும் எங்களால் முடிந்த அளவுக்கு களத்தில் இறங்கி மீட்பு பணிகளை செய்து வருகிறோம். அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகிறோம்.
இது இயற்கை பேரிடர்.. எதிர்பார்த்ததை விட அதிக மழை பெய்துள்ளது. வரலாற்றில் பல வருடங்களுக்கு பிறகு இப்படி ஒரு மழை பெய்துள்ளது. களத்தில் இறங்கி எங்களால் முடிந்த அளவு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications