மழை சாறெடுக்கப்போகுது.. சென்னை நோக்கி நகர்ந்த மேகக்கூட்டம்.. குறிப்பா இங்க.. எச்சரிக்கும் வெதர்மேன்!
சென்னை: ஒரு தீவிரமான மேகம் சென்னை நகரை நோக்கி நகர்ந்து வருவதால், கடலுக்கு அருகில் உள்ள பகுதிகளில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தென் தமிழகம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மேலும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகியுள்ளது. அது மேலும் வலுவடையும் என்பதால் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளின் கடலோரப் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
அதே போல தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதாவது விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், அடுத்த 25 முதல் 30 நாட்களுக்கு வங்கக் கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால் சென்னை முதல் நாகப்பட்டினம் வரையிலான கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் டிசம்பர் இரண்டாம் தேதி வரை மழை இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாடு வெதர்மேன், அண்மையில் ஒரு தகவலை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு தீவிரமான மேகம் சென்னை நகரை நோக்கி நகர்ந்து வருகிறது, அடுத்த 1 மணி நேரத்தில் குறிப்பாக கடலுக்கு அருகில் உள்ள பகுதிகளில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த பருவமழையின் முதல் பெரிய மழை எண்ணிக்கை வட தமிழக கடலோர மாவட்டங்களில் பதிவாகியுள்ளது. தென் சென்னை புறநகர் பகுதியான கேளம்பாக்கம் வரை பலத்த மழை பெய்தது. பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் முதலாவது 100 மி.மீ மழையை பதிவு செய்துள்ளது. இன்றும் நாளையும் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன. சென்னையில் அடுத்த சில மணி நேரங்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும். குறிப்பாக தென் சென்னையில் கடலுக்கு அருகில் உள்ள பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications