வங்க கடல் + அரபிக்கடல்.. மீண்டும் கொட்டுது மழை.. "இதை" கவனியுங்க.. ஓடோடி வந்த அமமுக டிடிவி தினகரன்
சென்னை: தமிழகத்தில் மழை தொடரும் என்றும், ஆரஞ்சு அலர்ட் குறித்தும் அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், அமமுக பொதுச்செயலாளர் தினகரன் முக்கிய கோரிக்கை ஒன்றை அரசுக்கு விடுத்துள்ளார்.
சென்னை, செங்கல்பட்டு, டெல்டா உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்மழை பெய்துவரும் நிலையில், மக்கள் எந்தவித பாதிப்புமின்றி பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.. இந்த மழை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
பரவலான மழை: அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21ம் தேதி தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியிருக்கிறது.
ஆரஞ்சு அலர்ட்: இதனிடையே, தமிழ்நாட்டில் உள்ள வட கடலோர மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், தென்மேற்கு வங்கக்கடல் அதையொட்டிய வளிமணிடல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், இன்றைய தினம் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
அதற்கேற்றவாறு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளம் மக்களை வாட்டிய நிலையில், இந்தமுறை முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியிருக்கிறார். இதுகுறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் தினகரன் பதிவிட்டுள்ளதாவது:
"சென்னை, செங்கல்பட்டு, டெல்டா உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்மழை பெய்துவரும் நிலையில், மக்கள் எந்தவித பாதிப்புமின்றி பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
பாதிப்புகள்: கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்த சென்னை மற்றும் தென்மாவட்ட மக்கள், அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்குள்ளாகவே மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியிருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, டெல்டா உள்ளிட்ட பத்துக்கும் அதிகமான மாவட்டங்களில் பலத்த கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை விடுத்திருக்கும் வானிலை ஆய்வு மையம், அடுத்த இரு தினங்களுக்கு 11 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு என தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்துடன் முறையான தொடர்பில் இருந்து அவர்கள் விடுக்கும் எச்சரிக்கையை சரிவர கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டால் மழை பாதிப்பின் தாக்கம் பெரிய அளவில் இருக்காது என பொதுமக்கள் கருதுகின்றனர்.
நோய்த் தொற்று: எனவே, அடுத்த 2 தினங்களில் பெய்யக்கூடிய மழையால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கணித்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, மழைக்காலங்களில் பரவக்கூடிய நோய்த்தொற்றுகளில் இருந்தும் மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications