இனி மழை விடாது போல.. கோவை, நீலகிரிக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! இன்று 8 மாவட்டங்களில் கனமழை கொட்டுமாம்
சென்னை: தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களின் மழைப்பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு நிற எச்சரிக்கையும், நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை மழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து வருவதால், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

குமரியில் தொடரும் மழை
எனினும் தமிழகத்தில் நேற்று மாலையில் இருந்தே பல்வேறு பகுதிகளில் மழை கொட்டியது. தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலையில் இருந்து கனமழை கொட்டத் தொடங்கியது. ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. குமரி மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று மாலை முதல் இன்று காலை வரை மழை விட்டு விட்டு தொடர்ந்து பெய்து வருகிறது.
குழித்துறை, திக்குறிச்சி, மார்த்தாண்டம், திருவட்டார் உள்ளிட்ட பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை கொட்டி வருகிறது. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் கூறியிருப்பதாவது:-
இன்று 8 மாவட்டங்களுக்கு அலர்ட்
கேரளாவில் இன்று அல்லது நாளை தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும் பரவுவதற்கான வாய்ப்புள்ளது. நேற்று தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை (23-05-2025) அதே பகுதிகளில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது வடக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடையக்கூடும்.
காற்றுடன் கூடிய மழைக்கு சான்ஸ்
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும். எனவே, சனிக்கிழமை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை, நாளை மறுநாள்
நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications