அது நம்மை நோக்கி வருது.. மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி! அடுத்த 3 நாட்கள் மிக கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: குமரிக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "தெற்கு இலங்கை & அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதியில் காற்று சுழற்சி நீடிக்கிறது. இச்சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி குமரிக்கடல் பகுதியில் உருவாககூடும். குமரிக்கடல் பகுதியில் டிசம்பர் 17, 18 தேதிகளில் தாழ்வு பகுதி நிலைக்கொண்டு, டிசம்பர் 19 ஆம் தேதி லட்சதீவுகள் அருகே காற்று சுழற்சியாக வலுவிழக்க கூடும். இதனால் தமிழகத்தின் மத்திய & தென் மாவட்டங்களில் அடுத்த 72 மணி நேரத்திற்கு வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நாள் 1 (16.12.2023) வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். டெல்டா & தென் கடலோர மாவட்டங்களான மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கனமழையும், கடலோரத்தின் ஒருசில இடங்களில் மிககனமழையும் பதிவாகும்.
பிற கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் பரவலாக மிதமானது முதல் சற்றே கனமழையும் ஓரிரு இடங்களில் கனமழையும் பதிவாகும். உள் மாவட்டங்களான திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு / நள்ளிரவு மிதமானது முதல் சற்றே கனமழை பதிவாகும்.
நாள் 2 (17.12.2023) & நாள் 3 (18.12.2023): மத்திய & தென் கடலோர மாவட்டங்களான மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பரவலாக அநேக இடங்களில் கனமழையும், மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் மிககனமழையும் பதிவாகும்.
குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் டிசம்பர் 17, 18 தேதிகளில் ஓரிரு இடங்களில் அதிகனமழை வாய்ப்பு உள்ளது. அதேபோல், நாகை, திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது,
தென்கோடி மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் அதித கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. பிற மாவட்டங்களில் கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும். வடகடலோரம் & வடக்கு உள் மாவட்டங்கள் & கொங்கு மாவட்டங்களில் ஆங்காங்கே மழை வாய்ப்பு. சென்னை & புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரிரு முறை மழை வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: அடுத்த 24 மணி நேரத்தில் குமரிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால். மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக மன்னார் வளைகுடா, பாக் நீர் இணைப்பு, குமரிக்கடல் & இலங்கை கடலோர பகுதிகளில் பலத்த சூறைக்காற்றும், பலத்த மழையும் பெய்யும் என எச்சரிக்கப்படுகிறது." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications